பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் நடைபெறும் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் ஆறு பிரிவுகள் உள்ளன. இதில் சீன வீராங்கனைகள் ஐந்து பிரிவுகளில் பதக்கம் வென்றுள்ளனர். இன்னும் ஒரு பிரிவில் குரூப் போட்டி நடைபெற உள்ள நிலையில், அங்கும் சீனாவிற்கு பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது.
ஒலிம்பிக்கில் சிறப்பான பங்களிப்பு செய்யும் நாடுகளில் சீனா முக்கியமானது என்பதற்கு இதுவே சான்றாக அமைந்துள்ளது. சமீபத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான லோவ்லினா பர்கோஹைன், சீனாவின் லி கியானிடம் தோல்வியடைந்ததன் மூலம் இந்தியாவின் பதக்க கனவு சிதறியது. இதன் மூலம் சீனா மேலும் ஒரு பதக்கத்தை உறுதிப்படுத்தியது.

இந்த முறை ஒலிம்பிக் தொடரில் மகளிர் குத்துச்சண்டையில் சீனா வரலாற்று சாதனை படைதுள்ளது. சீன குத்துச்சண்டை வீராங்கனைகள் ஆறு பிரிவுகளில் ஐந்தில் குறைந்தபட்சம் ஒரு பதக்கம் வென்றுள்ளனர். ஆனால், இந்திய வீராங்கனைகள் ஒரு பதக்கம் கூட வெல்லவில்லை.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் 50 கிலோ பிரிவில் சீனாவின் வூ யு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 54 கிலோ பிரிவில் சாங் யுவான் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
57 கிலோ பிரிவில் எக்ஸ் ஜிச்சுன் காலிறுதியை கடந்துள்ளார். 60 கிலோ பிரிவில் யாங் வென்லு இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். மேலும் 66 கிலோ மற்றும் 75 கிலோ பிரிவுகளில் யாங் லியு மற்றும் லி கியான் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து 57 கிலோவில் ஜாஸ்மின் லாம்போடியா, 75 கிலோவில் லோவ்லினா பர்கோஹைன், 54 கிலோவில் பிரீதி பவார் மற்றும் 50 கிலோவில் நிகத் ஜரீன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஜாஸ்மின் 32 பேர் சுற்றில் தோற்றார். நிகத் ஜரீன் முதல் சுற்று போட்டியாளரான சீன வீராங்கனை யு வூவிடம் தோற்றார். பிரீதி பவார் 16 பேர் சுற்றிலும் தோல்வியடைந்தார். லோவ்லினா காலிறுதியில் சீனாவின் லி கியானிடம் 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.