பாரிஸ்: பிரான்ஸின் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் டிரையாத்லான் விளையாட்டில் நீச்சல் போட்டி நடத்தப்பட்ட செய்ன் நதி கடுமையாக மாசுபட்டுள்ளதாக பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஜோலியன் வெர்மெய்லன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கான டிரையாத்லான் போட்டியில் பங்கேற்ற அவர், 1500 மீட்டர் நீச்சல் போட்டி நடத்தப்பட்ட செய்ன் ஆற்றின் தண்ணீரில் நிறைய குப்பைகள் இருந்ததாகவும், அதைப் பார்த்து அருவருப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். சென்னையில் கூவம் ஆறு எப்படி ஒரு காலத்தில் நல்ல ஆறாக இருந்து, இப்போது சாக்கடையாக மாறி உள்ளதோ, அதே போன்ற நிலையில் தான் பாரிஸின் செய்ன் ஆறும் இருந்தது.

பல ஆண்டுகளாக மோசமான நிலையில் இருந்த அந்த ஆற்றை, ஒலிம்பிக் தொடருக்காக பல்லாயிரம் கோடி செலவு செய்து சுத்தம் செய்தது பிரான்ஸ். ஆனாலும், அங்கே உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியா எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாகவும், இன்னமும் குப்பைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
"நான் பாலத்தின் கீழ் நீந்திக் கொண்டிருந்தபோது, நாம் அதிகம் யோசிக்கக்கூடாத விஷயங்களை உணர்ந்தேன் மற்றும் பார்த்தேன்" என்று அவர் தெரிவித்தார். இந்தப் போட்டியில் 24-வது இடத்தைப் பிடித்த அவர், நீச்சல் போட்டியின் போது அதிக அளவு தண்ணீரை விழுங்கியதாகவும், அதன் விளைவாக தனது உடலில் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து கவலை கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
"நான் நோய்வாய்ப்படுகிறேனா இல்லையா என்பது நாளை தெரியும்" என்றும், "அந்த தண்ணீர் நிச்சயமாக கோக்கோ-கோலா அல்லது ஸ்ப்ரைட் போன்று சுவையாக இல்லை" என்றும் அவர் கூறினார்.
ஒலிம்பிக் தொடருக்கு சில நாட்கள் முன்னதாக செய்ன் ஆற்றின் நீரில் ஈ.கோலி மற்றும் பிற பாக்டீரியாக்கள் அதிக அளவு இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதிகாரிகள் தண்ணீர் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாகக் கூறி, பெண்கள் நீச்சல் போட்டியைத் தொடங்கி வைத்தனர்.
ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட சோதனையில், தண்ணீரில் உள்ள ஈ.கோலி அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட 10 மடங்கு அதிகமாக இருந்ததாக சிபிஎஸ் செய்திகள் தெரிவித்தது.
ஈ.கோலி பாக்டீரியா பெரும்பாலும் மலத்தில் காணப்படும். அது வயிற்றுப்போக்கு, சிறுநீர் பாதை தொற்று, நிமோனியா மற்றும் செப்சிஸ் போன்ற நோய்களை ஏற்படுத்தும்.
"கடைசி நேரத்தில் நீரின் தரம் சிறப்படைந்திருந்தாலும், நீச்சல் பகுதியின் சில இடங்களில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளன" என்று போட்டி அமைப்பாளர்கள் கூறினர்.
நதி நீரின் தரம் காரணமாக டிரையாத்லான் போட்டிகளுக்கு முந்தைய பயிற்சி நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், ஆண்களுக்கான டிரையாத்லான் போட்டி செவ்வாய்க்கிழமையில் இருந்து புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பாரிஸில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்காக பிரான்ஸ் அதிகாரிகள் பல ஆண்டு காலமாக மாசுபட்டு இருந்த செய்ன் நதியை சுத்தம் செய்ய 1.5 பில்லியன் டாலர் செலவு செய்தனர்.
டிரையாத்லான் போட்டியின் நீச்சல் பகுதியையும் மராத்தான் நீச்சல் போட்டிகளையும் செய்ன் நதியில் பாதுகாப்பாக நடத்த முடியும் என்று அவர்கள் வலியுறுத்தினர். "செய்ன் நதி நூறு ஆண்டுகளாக மாசுபட்டுள்ளது, எனவே, அவர்கள் தடகள வீரர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்று கூற முடியாது. அது முட்டாள்தனம்!" என்று ஜோலியன் வெர்மெய்லன் கூறினார்.
30 வயதான ஜோலியன் வெர்மெய்லன், முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றார். இந்தப் போட்டிக்கு முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததாக தெரிவித்தார். "நான் புரோபயாட்டிக்ஸ் எடுத்தேன். நான் என் யாகுல்ட்டை குடித்தேன். அதற்கு மேல் எதுவும் என்னால் செய்ய முடியவில்லை. நீச்சல் போட்டியின் போது தண்ணீர் குடிக்காமல் இருக்க நினைத்தேன். ஆனால் அந்த திட்டமும் தோல்வியடைந்தது." என்றார்,
உலகத் தரம் வாய்ந்த தடகள வீரர்களை இத்தகைய மாசுபட்ட நீரில் போட்டியிட அனுமதித்த அதிகாரிகளை வெர்மெய்லன் கண்டித்தார். "இனி எதுவும் செய்ய முடியாது. அவர்கள் போட்டியை முற்றிலுமாக ரத்து செய்ய முடியாது. இப்போது நீச்சல் போட்டிக்கு பின் அதிகம் பேர் நோயாளிகளாக மாற மாட்டார்கள் என்று அவர்கள் நம்பிக் கொண்டு இருப்பார்கள்." என்று போட்டி அமைப்பாளர்களை விமர்சித்தார் ஜோலியன்.