பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றார் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவர் புதிய ஈட்டி வாங்க பணமில்லாமல் தவித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் விளையாட்டு அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் அரசு அவருக்கு உதவி செய்யாத நிலையில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தனது நண்பர் அர்ஷத் நதீமுக்காக குரல் கொடுத்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஈட்டி எறிதல் விளையாட்டில் உலகிலேயே முன்னணி வீரராக இருந்து வருகிறார் நீரஜ் சோப்ரா. அவருக்கு அடுத்து பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் முன்னணி வீரராக இருக்கிறார்.

இவர்கள் இருவரும் பல்வேறு சர்வதேச ஈட்டி எறிதல் தொடர்களில் ஒரே சமயத்தில் பங்கேற்றதால் இயல்பாகவே நண்பர்களாகவும் இருந்தனர். நீரஜ் சோப்ராவுக்கு இந்தியாவில் போதுமான உதவிகள் கிடைத்து வருகிறது. இந்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் உட்பட பலரும் அவருக்கு வேண்டிய உபகரணங்கள் மற்றும் பயிற்சிக்கு உதவிகளை செய்து இருந்தனர்.
ஆனால், அர்ஷத் நதீமுக்கு அப்படி எந்த உதவிகளும் கிடைக்கவில்லை. அவர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் போது பயணம் செய்யவும், பயிற்சி பெறவும் பணமில்லாமல் அவரது கிராமத்தில் இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பணம் வாங்கிக் இந்த விளையாட்டில் ஈடுபட்டார்.
பின்னர், அவர் காமன்வெல்த் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட போதும் பாகிஸ்தான் அரசு அவருக்கு போதுமான உதவிகளை செய்யவில்லை. 2015 ஆம் ஆண்டு அவருக்கு ஒரு ஈட்டி வழங்கப்பட்டது. அந்த ஈட்டியை வைத்து தான் அவர் கடந்த 9 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வந்திருக்கிறார். அதை வைத்து தான் பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இந்த நிலையில், 2024 ஒலிம்பிக் தொடருக்கான பயிற்சியின் போது தனது ஈட்டி மோசமான நிலையில் இருப்பதாகவும், அதைக் கொண்டு மேலும் போட்டிகளில் பங்கேற்க முடியாது எனவும், இது குறித்து பாகிஸ்தான் அரசு மற்றும் அதிகாரிகள் எந்த உதவியும் செய்யவில்லை எனவும் அர்ஷத் நதீம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அவரது மோசமான நிலையை அறிந்த நீரஜ் சோப்ரா, "ஹர்ஷத் நதீம் உலகின் முன்னணி முன்னணி ஈட்டி எறிதல் வீரர். அவருக்கு ஒரு ஈட்டி வாங்க முடியவில்லை என்பதை அறிந்து எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. அவர் இந்த விளையாட்டில் அடைந்து இருக்கும் உயரத்திற்கு, ஈட்டி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அவருக்கு ஸ்பான்சர் செய்ய முன் வருவார்கள் என நம்புகிறேன்" எனக் கூறி இருந்தார்.
அர்ஷத் நதீம் இந்த போராட்டங்களுக்கு இடையே தான் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றார். ஈட்டி எறிதல் விளையாட்டில் ஒலிம்பிக் சாதனையை முறியடித்து 92.97 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கத்தையும் வென்றார். தற்போது பாகிஸ்தான் அரசு அவருக்கு உதவாததையும், இந்தியாவின் நீரஜ் சோப்ரா அவருக்காக குரல் கொடுத்ததையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அர்ஷத் தங்கமும், நீரஜ் வெள்ளியும் வென்ற பின் ஒன்றாக நின்ற புகைப்படம் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.