பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா ஆறு பதக்கங்களை மட்டுமே வென்று இருக்கும் நிலையில், ஆறு பதக்கங்களை வெல்லும் வாய்ப்பையும் நழுவ விட்டு இருக்கிறது.
இந்த ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதலில் ஒரு வெள்ளி, துப்பாக்கி சுடுதலில் மூன்று வெண்கலம், மல்யுத்தத்தில் ஒரு வெண்கலம், ஹாக்கியில் ஒரு வெண்கலம் வென்றது இந்தியா.

ஒரு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 71வது இடத்தை பிடித்தது இந்தியா. ஆனால், மேலும் 6 வெண்கலப் பதக்கங்களை இந்தியா நூலிழையில் தவற விட்டுள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆடவர் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் பாபுதா நான்காவது இடம் பிடித்து வெண்கலம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.
வில்வித்தை கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் தீரஜ், அங்கிதா இணை நான்காவது இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை தவறவிட்டது. துப்பாக்கி சுடுதல் மகளிர் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் நான்காவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை நழுவ விட்டார். துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் ஆனந்த்ஜீத் - மகேஷ்வரி இணை நான்காம் இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டது.
பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் நான்காவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார். பளு தூக்குதல் போட்டியில் மகளிர் 49 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு நான்காவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார்.
இதன் மூலம், இந்தியா ஆறு விளையாட்டுக்களில் நான்காவது இடம் பெற்று ஆறு வெண்கலப் பதக்கங்களை தவற விட்டுள்ளது. இதற்கு முன் நடந்த ஒலிம்பிக் தொடர்களில் இந்தியா 17 முறை நான்காவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கங்களை தவறவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதிகபட்சமாக 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் மூன்று வெண்கலப் பதக்கங்களை தவறவிட்டு இருந்தது. ஆனால், இந்த முறை ஆறு பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பு பறிபோனது.
இது தவிர மல்யுத்தத்தில் வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றும் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் ஒரு வெள்ளி பதக்கம் கிடைத்திருக்க வேண்டிய வாய்ப்பு நழுவிப் போனது. ஒரே ஆண்டில் இந்தியா ஏழு பதக்கங்களை நெருக்கத்தில் தவற விட்டு இருக்கிறது.