பாரிஸ் : 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் மோத உள்ள ஹாக்கி அரை இறுதி போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த போட்டிக்கு எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
இந்த அரை இறுதியில் இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்றால் வெள்ளிப் பதக்கம் அல்லது தங்க பதக்கம் வெல்வது உறுதி ஆகி விடும். குரூப் சுற்றில் இந்திய ஹாக்கி அணி தான் விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றிகளை பெற்றது. அடுத்து நடந்த கால் இறுதி சுற்றில் கிரேட் பிரிட்டன் அணிக்கு எதிராக பத்து வீரர்களை வைத்துக் கொண்டு ஆடியது.

இந்திய அணியின் டிஃபன்டர் அமித் ரோஹிதாஸ் சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆடுகளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனால், பத்து வீரர்களை வைத்துக்கொண்டு இந்திய அணி ஆடியது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1 - 1 என சமநிலையில் இருந்தன. அதனால், சூட் அவுட் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டார்.
சூட் அவுட்டில் 4 - 2 என்ற கோல் கணக்கில் கிரேட் பிரிட்டனை வீழ்த்தியது இந்திய அணி. தற்போது அரை இறுதியில் ஜெர்மனியை சந்திக்க உள்ளது. அமித் ரோஹிதாஸ் ஒரு போட்டியில் தடை செய்யப்பட்டு இருக்கிறார். அதனால். அவர் அரை இறுதியில் பங்கேற்க முடியாது. எனவே, இந்தியா அணி 15 வீரர்கள் உடன் விளையாட உள்ளது.
ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் இதுவரை 18 முறை மோதியுள்ளன. அதில் இந்தியா எட்டு முறையும், ஜெர்மனி ஆறு முறையும் வெற்றி பெற்றுள்ளன. நான்கு போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இதில் இந்திய அணி 41 கோலும், ஜெர்மனி 37 கோலும் அடித்துள்ளன. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த போட்டி இன்று இரவு 10:30 மணிக்கு இந்திய நேரப்படி நடைபெறும். இந்தப் போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம். மொபைலில் பார்க்க விரும்புபவர்கள் ஜியோசினிமா செயலி மூலமாக இலவசமாக பார்க்கலாம்.