பாரிஸ் : துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் கலப்பு அணி விளையாட்டில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்தது. சீன ஜோடி 44-43 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. வெறும் ஒரு புள்ளியில் வெற்றியை தவற விட்டது இந்தியா.
துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் கலப்பு அணி விளையாட்டில் இந்தியா சார்பில் மகேஸ்வரி சவுஹான் மற்றும் அனந்த்ஜீத் சிங் நருகா ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக நடந்த அரை இறுதியில் அவர்கள் தோல்வி அடைந்ததால் வெண்கலத்துக்கான போட்டியில் பங்கேற்றனர்.

சீனாவுக்கு எதிராக நடந்த இந்தப் போட்டியில் மகேஸ்வரி சவுஹான் மற்றும் அனந்த்ஜீத் சிங் அணி துவக்கம் முதலே சிறப்பாக புள்ளிகளை பெற்று வந்தது. ஆனால், கடைசி இரண்டு சுற்றுகள் மீதமிருந்த நிலையில் சீனா 28 - 27 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவை விட முன்னிலையில் இருந்தது.
கடைசி இரண்டு சுற்றுகளிலும் இரண்டு அணிகளும் அனைத்து புள்ளிகளையும் பெற்றன. அதனால், இந்தியா ஒரு புள்ளி பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. முடிவில் சீனா 44 - 43 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. முன்னதாக துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர்கள் பலர் நான்காம் இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டு இருந்தனர். அந்தப் பட்டியலில் ஸ்கீட் கலப்பு அணியும் சேர்ந்தது.
இந்த தோல்வி செய்தி வெளியான அடுத்த சில நிமிடங்களில் ஆடவர் ஒற்றையர் வெண்கலப் பதக்கத்துக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லட்சயா சென், மலேசிய வீரரிடம் தோல்வி அடைந்து நான்காவது இடத்தை பிடித்தார். இதை அடுத்து இந்திய ரசிகர்கள் சோகமானார்கள். இந்திய பேட்மிண்டன் வீரர்கள் ஐந்து பிரிவுகளில் பங்கேற்று அதில் ஒரு பதக்கம் கூட வெல்லவில்லை. அதனால், பேட்மிண்டன் ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அவர் மலேசிய வீரரிடம் தோல்வி அடைந்திருந்தார்.