பாரிஸ் : 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் குத்துச்சண்டையில் பாலின சர்ச்சை வெடித்து இருக்கிறது. கடந்த 2023 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பாலின தகுதித் தேர்வில் அல்ஜீரிய வீராங்கனை இமான் கெலிஃப் தோல்வியடைந்தார். அதே போல, தைவான் வீராங்கனை லின் யூ-டிங்-கும் பாலின சோதனையில் தோல்வி அடைந்தார்.
அவர்கள் இருவரும் அந்த தொடரில் இருந்து பாதியில் நீக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் பிரிவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் மகளிர் 66 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் காலி இறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி, இமான் கெலிஃப்-க்கு எதிராக ஆடினார்.

அந்தப் போட்டியில் கெலிஃப், கரினி மூக்கில் குத்தினார். போட்டி துவங்கி 30 வினாடிகளில் கரினி போட்டியை நிறுத்தினார். கெலிஃப் தன்னை குத்திய போது கடும் வலி ஏற்பட்டதாகவும், இதுவரை தனது குத்துச்சண்டை வாழ்வில் இப்படி ஒரு தாக்குதலை தான் எதிர்கொண்டதில்லை எனவும் கூறி, கெலிஃப் பெண் அல்ல என மறைமுகமாக குற்றம் சுமத்தி போட்டியில் இருந்து வெளியேறினார்.
இதை அடுத்து கெலிஃப்-ஐ மகளிர் பிரிவில் ஆட அனுமதித்தது தவறு என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மீது விமர்சனம் எழுந்தது. இது தவறு என பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர். இதை அடுத்து இமான் கெலிஃப் மற்றும் தைவானின் லின் யூ-டிங் மீது நடத்தப்பட்ட சமூக வலை தளங்கள விமர்சனங்களுக்கும், கரினி விலகியதற்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் பாஸ்போர்ட்டில் என்ன பாலினம் குறிப்பிடப்பட்டுள்ளதோ அதன் அடிப்படையில் தான் வீரர்களின் பாலினம் அடையாளம் காணப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்ட அறிக்கை - "ஒவ்வொரு நபருக்கும் பாரபட்சமின்றி விளையாட்ட உரிமை உண்டு. பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களும் போட்டியின் தகுதி மற்றும் நுழைவு விதிமுறைகள் மற்றும் பாரிஸ் 2024 குத்துச்சண்டை பிரிவு (PBU) வகுத்த அனைத்து மருத்துவ விதிமுறைகளுக்கும் இணங்கி இருக்கிறார்கள். முந்தைய ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளைப் போலவே, விளையாட்டு வீரர்களின் பாலினம் மற்றும் வயது அவர்களின் பாஸ்போர்ட்டை அடிப்படையாகக் கொண்டது."
"இந்த இரண்டு விளையாட்டு வீரர்களும் சர்வதேச குத்துச்சண்டை அமைப்பின் திடீர் மற்றும் தன்னிச்சையான முடிவால் பாதிக்கப்பட்டவர்கள். 2023 இல் சர்வதேச குத்துச்சண்டை அமைப்பின் உலக சாம்பியன்ஷிப்பில், அவர்கள் எந்தவிதமான நடைமுறையும் இல்லாமல் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்."
சர்வதேச குத்துச்சண்டை அமைப்பின் இணையதளத்தில் கிடைக்கும் அறிக்கையின்படி, இந்த முடிவு சர்வதேச குத்துச்சண்டை அமைப்பின் பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியால் மட்டுமே எடுக்கப்பட்டது. சர்வதேச குத்துச்சண்டை அமைப்பு அதற்குப் பிறகுதான் ஒப்புதல் அளித்தது, மேலும், எதிர்காலத்தில் இதே போன்ற நிகழ்வுகளில் பின்பற்றுவதற்கான நடைமுறையை நிறுவி, சர்வதேச குத்துச்சண்டை அமைப்பு அந்த விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், சர்வதேச குத்துச்சண்டை அமைப்பு "பாலின சோதனையில் தெளிவான நடைமுறையை நிறுவ வேண்டும்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது."
இந்த இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு எதிரான தற்போதைய எதிர்ப்புகள் முற்றிலும் இந்த தன்னிச்சையான முடிவை அடிப்படையாகக் கொண்டது. இது எந்த முறையான நடைமுறையும் இல்லாமல் எடுக்கப்பட்டது - குறிப்பாக இந்த விளையாட்டு வீரர்கள் பல ஆண்டுகளாக உயர்மட்ட போட்டியில் போட்டியிடுவதைக் கருத்தில் கொள்ளாமல் இந்த விவகாரம் முரணாக கையாளப்படுகிறது.
ஒலிம்பிக் சாசனம், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நெறிமுறைகள் மற்றும் மனித உரிமைகள் மீதான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வியூகக் கட்டமைப்பின்படி ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுதிபூண்டுள்ளது. இரண்டு விளையாட்டு வீரர்களும் தற்போது பெறும் முறைகேடுகளால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வருத்தமடைந்துள்ளது." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.