பாரிஸ்: 33வது ஒலிம்பிக் தொடர் பாரிஸ் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் 2வது நாளிலேயே இந்தியா தனது பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது. மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார். 22 வயதாகும் மனு பாக்கர், 2வது முறையாக போட்டியிட்ட ஒலிம்பிக் தொடரிலேயே இந்த சாதனையை செய்துள்ளார்.
துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் முதல் இந்தியப் பெண் என்ற புதிய வரலாற்றையும் படைத்துள்ளார். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனு பாக்கர் டோக்கியோ ஒலிம்பிக் தொடரிலேயே பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் மனு பாக்கருக்கு கொடுக்கப்பட்ட துப்பாக்கியில் இருந்த கோளாறு காரணமாக வெளியேற்றப்பட்டார்.

தற்போது அடுத்த ஒலிம்பிக் தொடரிலேயே மனு பாக்கர் தான் யார் என்பதை நிரூபித்துள்ளார். இதேபோல் அபினவ் பிந்த்ரா ஏதன்ஸ் ஒலிம்பிக்கில் பாதிக்கப்பட்டு, பெய்ஜிங் ஒலிம்பிக்கில் மரண மாஸ் கம்பேக்கை கொடுத்தார். 2004ஆம் ஆண்டு ஏதன்ஸில் நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் அபினவ் பிந்த்ராவுக்கு அளிக்கப்பட்ட தளம் அவருக்கு பிரச்சனையாக மாறியது.
அபினவ் பிந்த்ரா நின்றிருந்த தளம் உடைந்திருந்தால், அவர் இறுதிப்போட்டியில் 8வது இடத்திலேயே வெளியேற்றப்பட்டார். அதன்பின் மீண்டும் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்ற அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். இந்தியாவுக்காக தனிநபர் விளையாட்டு பிரிவில் தங்கம் வென்ற முதல் வீரர் அபினவ் பிந்த்ரா தான்.
முதல் ஒலிம்பிக்கில் சிக்கலை சந்திக்கும் போது, அடுத்த ஒலிம்பிக்கில் இருவருமே தரமான கம்பேக்கை கொடுத்துள்ளனர். இதனால் ரசிகர்கள் பலரும் மனு பாக்கரை கொண்டாடி வருகின்றனர். 22 வயதில் மனு பாக்கர் துப்பாக்கிச் சுடுதலில் வென்றுள்ளதால், பலரும் யார் இவர் என்று தேடி வருகின்றனர். ஹரியானாவைச் சேர்ந்த மனு பாக்கர், சிறு வயதில் குத்துச்சண்டை மற்றும் டென்னிஸில் ஆர்வம் கொண்டிருந்தார்.
ஆனால் அவரின் அப்பா தான் மனு பாக்கரை துப்பாக்கிச் சுடுதல் பக்கம் திருப்பியவர். கடந்த ஒலிம்பிக் தொடரின் போது பயிற்சியாளர்களுடன் சில மோதல் போக்கை கொண்டிருந்த இவர், இம்முறை தனது பழைய பயிற்சியாளர் ஜஸ்பால் ரானாவிடம் பயிற்சியை தொடங்கி பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.