பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா முதல்முறையாக மூன்றாவது சுற்றுக்கு (ரவுன்ட் ஆஃப் 16 - Round of 16) சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் வரலாற்று சாதனை படைத்தார்.
2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனையான மணிகா பத்ரா பாரிஸில் தன்னை விட தரவரிசையில் முன்னிலையில் உள்ள பிரெஞ்சு வீராங்கனை பிரித்திகா பவடேவுக்கு எதிராக 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அதன் மூலம், ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற சாதனையை மணிகா பத்ரா செய்தார்.

மணிகா பத்ராவை எதிர்த்து ஆடிய பிரெஞ்சு வீராங்கனை பிரித்திகா பவடே பாண்டிச்சேரியை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். அவர் மணிகா பத்ராவை விட தரவரிசையில் முன்னணியில் இருக்கிறார்.
அப்படி இருந்தும் மணிகாவிடம் தோல்வி அடைந்தார். 11-9, 11-6, 11-9, 11-7 என்ற செட் கணக்கில் மணிகா பத்ரா வெற்றியைப் பதிவு செய்தார்.
மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியதன் மூலம், ஒலிம்பிக் தொடர்களில் இந்திய டேபிள் டென்னிஸுக்கு மணிகா பத்ரா புதிய அளவுகோலை நிர்ணயித்துள்ளார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அச்சந்தா ஷரத் கமல் இரண்டாவது சுற்று வரை மட்டுமே முன்னேறி இருந்தார். அதே டோக்கியோ ஒலிம்பிக்கில் மணிகாவும் இரண்டாவது சுற்று வரை முன்னேறி இருந்தார். தற்போது இந்திய டேபிள் டென்னிஸின் டோக்கியோ ஒலிம்பிக் செயல்பாட்டை மணிகா முறியடித்து இருக்கிறார்.