பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் மூன்றாவது பதக்கம் செல்லும் வாய்ப்பை இழந்தார். முன்னதாக துப்பாக்கி சுடுதலில் இரண்டு பதக்கம் வென்று இருந்தார்.
ஒரே ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற மாபெரும் சாதனையை செய்து இருந்தார். அதைத் தொடர்ந்து துப்பாக்கி சுடுதல் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டியிலும் அவர் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் அவர் இந்தப் போட்டியில் நான்காவது இடத்தை மட்டுமே பெற்று பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

இந்தப் போட்டியில் மனு பாக்கர் துவக்கத்தில் பின்னடைவை சந்தித்தார். முதல் சுற்றில் அவர் 5 வாய்ப்பில் 2 முறை மட்டுமே இலக்கை தாக்கினார். அதனால் ஆறாவது இடத்தில் இருந்தார். அதன் பின் அதிரடியாக முன்னேறிய அவர் மூன்றாவது சுற்றின் முடிவில் மொத்தம் 15 வாய்ப்பில் 10 முறை இலக்கை தாக்கி இரண்டாவது இடத்தை பிடித்தார்.
நான்காவது சுற்றில் அவர் மூன்று முறை மட்டுமே இலக்கை தாக்கினார். அதன் காரணமாக ஆறாவது இடத்துக்கு சென்றார். அதனால் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக அச்சம் ஏற்பட்டது. அதன் பின் அபாரமாக செயல்பட்ட அவர் 7வது சுற்றின் முடிவில் 26 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தார்.
எட்டாவது சுற்றில் நான்காவது இடத்துக்கான தகுதி நீக்கத்தின் போது ஹங்கேரியின் வெரோனிகாவுடன் டை பிரேக்கரில் மோதினார். அதில் தோல்வி அடைந்த மனு பாக்கர் நான்காவது இடம் பெற்று போட்டியில் இருந்து வெளியேறினார். முதல் மூன்று இடங்களில் இருப்பவர்களுக்கே பதக்கம் கிடைக்கும் என்பதால் அந்த வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்.