டெல்லி: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் நாடு திரும்பினார். அவருக்கு டெல்லியில் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது.
மனு பாக்கர் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் தலா ஒரு வெண்கலம் வென்றார். அதன் மூலம் ஒரே ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை செய்து இருந்தார். இதை அடுத்து அவர் வருகையை கொண்டாடி உள்ளனர் டெல்லி மக்கள்.

அவரது போட்டிகள் முடிவடைந்த நிலையில் அவர் பாரிஸிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் AI 142-இல், ஒரு மணி நேரம் தாமதமாக காலை 9:20 மணியளவில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கினார் மனு பாக்கர். அவரது குடும்பத்தினர் அவரை வரவேற்றனர். டெல்லி மக்கள் பெருமளவில் அங்கு கூடி நின்று அவரை வாழ்த்தினர்.
அவருக்கு மாலைகள், பூச்செண்டுகள் அளிக்கப்பட்டன. வாத்தியங்கள் முழங்கின. தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை கண்டு அவர் திக்குமுக்காடிப் போனார். அவரது தந்தை ராம் கிஷன் மற்றும் தாய் சுமேதா ஆகியோரும் அவருடன் இருந்தனர்.
மனு பாக்கர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவிலும் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் அவர் நான்காவது இடம் பெற்று ஏமாற்றம் அடைந்தார். எனினும், அவர் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வென்றது இந்திய அளவில் பெரிய சாதனையாக உள்ளது. அவர் விரைவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.