பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றார். அதே சமயம், பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீம் ஒலிம்பிக் வரலாற்றை உடைத்து அதிக தூரம் ஈட்டியை வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தையும் வென்றார்.
அதை ஏற்றுக் கொள்ள முடியாத சில இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அர்ஷத் நதீம் ஊக்கம் மருந்து பயன்படுத்தி இருக்கலாம் என அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அதற்கு சிலர் கண்டனங்களையும் தெரிவித்து உள்ளனர்.

2021 டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று இருந்தார். அதனால், அவர் இந்த முறையும் தங்கப்பதக்கம் வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் இந்த இறுதிப் போட்டியில் ஐந்து முயற்சியில் ஒருமுறை மட்டுமே ஈட்டியை சரியாக வீசினார். மற்ற நான்கு முறையும் ஃபவுல் செய்தார்.
பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமும் சில முறை ஃபவுல் செய்தார். அதே சமயம், தனது இரண்டாவது முயற்சியில் அவர் 92.97 தூரம் ஈட்டி வீசி ஒலிம்பிக் சாதனை படைத்தார். இதற்கு முன் 90.57 மீட்டர் தூரம் வீசப்பட்டதே ஒலிம்பிக் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்த இறுதிப் போட்டியில் இரண்டு முறை முறியடித்தார் அர்ஷத் நதீம்.
அவர் 92.97 மீட்டர் மற்றும் 91.79 மீட்டர் தூரம் அவர் ஈட்டியை வீசி சாதனை படைத்திருந்தார். அதன் மூலம் அவர் தங்கப் பதக்கம் வென்றார். நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் மட்டுமே வீசி வெள்ளி பதக்கம் வென்றார். இதை அடுத்து, "பாகிஸ்தான் வீரர் ஊக்க மருந்து பயன்படுத்தி இருக்கலாம். உடனடியாக பரிசோதனை செய்யுங்கள்" என சில இந்திய நெட்டிசன்கள் பதிவுகளை வெளியிடத் தொடங்கினர்.
அதில் ஒருவர், "மற்ற அனைவரும் 88, 89, 90 மீட்டர் வரையே ஈட்டி வீசி உள்ளனர். இவர் மட்டும் எப்படி 92.97 தூரம் வீசினார்? இவருக்கு ஊக்க மருந்து சோதனை செய்யுங்கள்." என கூறி இருக்கிறார். மற்றொரு நெட்டிசன், "அர்ஷத் நதீம் உலக சாதனை படைத்த பின்னரும் அதை கொண்டாடவில்லை. அவர் முகத்தில் எந்தவிதமான உணர்வுகளும் இல்லை." என்பதை சுட்டிக்காட்டி அவருக்கு ஊக்க மருந்து சோதனை செய்ய வேண்டும் என கூறி இருக்கிறார்.
அதே சமயம் மற்றொரு நெட்டிசனோ, "அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதாலும், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் தங்கப்பதக்கம் வென்று விட்டார் என்பதாலும் சிலர் அவருக்கு ஊக்க மருந்து சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி வருகின்றனர். இது மிகவும் அவமானகரமான விஷயம் ஆகும். ஒருவர் சிறப்பாக செயல்பட்டால் அவரை பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள்," என கூறி இருக்கிறார்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் உள்ளது. உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் அனைத்து வீரர்களின் சிறுநீர் மாதிரியையும் பரிசோதிக்கும். இந்த ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற அர்ஷத் நதீம், நீரஜ் சோப்ரா என அனைவரும் இதற்கு உட்பட்டு தான் ஆக வேண்டும். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் ஊக்க மருந்து சோதனை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.