பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடர் ஃபிரான்சில் நடைபெற்று வருகிறது. அங்கு ஸ்கேட்போர்டு வீரர்கள் செய்த ஒரு விஷயம் அந்த நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அதே சமயம், இக்கட்டான நிலையில் ஸ்டேட்போர்டு வீரர்கள் தள்ளப்பட்டதும் விவாதத்திற்கு உரிய விஷயமாக மாறி உள்ளது.
2024 ஒலிம்பிக் தொடர் கடந்த 26 ஆம் தேதி பிரம்மாண்ட துவக்க விழாவுடன் துவங்கியது. இந்த நிலையில், சனிக்கிழமை அன்று ஸ்கேட்போர்டு போட்டிகள் நடக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அன்று மழை பெய்ததால் போட்டி திங்கள்கிழமைக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

திங்கள் அன்று போட்டிக்கு தயாரான கனடா மற்றும் அமெரிக்க வீரர்களை ஒரே பேருந்தில் போட்டி நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்றனர் போட்டி ஏற்பாட்டாளர்கள். அப்போது பாதி தூரத்தில் ஒரு குறுகிய சாலையில் பேருந்து சிக்கிக் கொண்டது. முன்னும் செல்ல முடியாமல், பின்னும் செல்ல முடியாமல் பேருந்து அங்கேயே நின்றது.
சுமார் பத்து நிமிடங்கள் வரை ஸ்கேட்போர்டு வீரர்கள் பேருந்து செல்வதற்காக காத்திருந்தனர். அதற்கு மேலும் தாமதம் செய்தால் போட்டி நேரத்திற்கு முன்பே செல்ல முடியாது என்பதால், சுதாரித்த கனடா மற்றும் அமெரிக்க வீரர்கள் ஸ்கேட்போர்டு போட்டி நடக்கும் இடத்திற்கு ஸ்கேட்போர்டிலேயே பயணம் செய்ய முடிவு செய்தனர்.
பேருந்து நின்ற இடத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் ஸ்டேட் போர்டு போட்டிகள் நடைபெற இருந்த லா கான்கார்ட் அர்பன் பார்க் இருந்தது. அந்த இரண்டு கிலோமீட்டர் தூரத்தையும் ஸ்கேட்போர்டிலேயே அவர்கள் பயணிக்க முடிவு செய்து, பரபரப்பான சாலையில் ஸ்கேட்போர்டில் சென்றனர்.
அதை பார்த்த ஃபிரான்ஸ் மக்கள் வியந்து போனார்கள். முதலில் அங்கிருந்தவர்களுக்கு இவர்கள் அனைவரும் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க வந்த வீரர்கள் என்பது தெரியவில்லை. பின்னர் அந்த விவரத்தை அறிந்து அவர்களுக்கு கைதட்டி உற்சாகம் அளித்தனர். குறுகலான சாலைகள் இருப்பதை முன்கூட்டியே உணர்ந்து சிறிய வாகனங்களில் வீரர்களை அழைத்துச் சென்றிருக்கலாம் என்ற விமர்சனமும் எழுந்தது.