Olympics 2024: மழையில் சிக்கிய இந்திய வீரர்கள்.. ஒலிம்பிக் தொடக்க விழாவில் என்ன நடந்தது?
பாரிஸ்: பாரிஸ் நகரின் செய்ன் ஆற்றில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் பிரம்மாண்ட துவக்க விழா தொடங்கியது. சுமார் 100 படகுகளில் பல்வேறு நாடுகளின் வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு துவங்கியது. ஒவ்வொரு படகிலும் மூன்று அல்லது நான்கு நாடுகளின் குழுக்கள் இடம் பெற்று இருந்தன. அவர்கள் தங்கள் தேசியக் கொடியை அசைத்தபடி சென்றனர்.

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் துவக்க விழாவில் பிவி சிந்து மற்றும் சரத் கமல் இந்திய தேசிய கொடியை ஏந்திச் சென்றனர். இந்திய வீரர்கள் அனைவரும் வெள்ளை நிற குர்தாவும், இந்திய வீராங்கனைகள் அனைவரும் வெளிர் சந்தன நிற சேலையில் இந்திய தேசிய கொடியின் வண்ணங்கள் இடம் பெறும் வகையிலும் உடை அணிந்து இருந்தனர்.
பொதுவாக பெரிய மைதானத்தில் நடத்தப்படும் ஒலிம்பிக் துவக்க விழா இந்த முறை பாரிஸ் செய்ன் ஆற்றில், திறந்தவெளியில் நடத்த முடிவெடுக்கப்பட்ட நிலையில், தொடக்க விழாவின் போது மழை பெய்ததால் வீரர்கள் அனைவரும் நனைந்தபடி படகில் சென்றனர். மேலும், திறந்தவெளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்குபெற்ற கலைஞர்கள், அதைக் காண வந்திருந்த மக்கள் என அனைவரும் கொட்டும் மழையில் நனைந்தபடி இருந்தனர்.
முன்னதாக இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடர் துவங்கியது. பாரிஸில் உள்ள செய்ன் ஆற்றில் துவக்க விழா அணிவகுப்பு நடைபெற்றது. சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சுமார் 100 படகுகளில் அணிவகுத்து சென்றனர்.
2024 ஒலிம்பிக் துவக்க விழாவை காண ஆற்றங்கரையோரம் சுமார் 3,26,000 பார்வையாளர்களுக்கு டிக்கெட் விநியோகிக்கப்பட்டு இருக்கிறது. அதில் 222,000 டிக்கெட்கள் இலவசமாக கொடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களின் மாடிகளில் இருந்தும் மக்கள் இந்த படகு அணிவகுப்பை கண்டு களித்தனர். ஆற்றங்கரையின் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


Click it and Unblock the Notifications