திருவனந்தபுரம்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அந்த அணியின் கோல் கீப்பரும், மூத்த ஹாக்கி வீரருமான ஸ்ரீஜேஷ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். மேலும், அவர் ஒலிம்பிக் தொடரில் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்ததோடு, ஹாக்கி விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
நாடு திரும்பிய அவருக்கு அவரது சொந்த மாநிலமான கேரளாவில் அரசு சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்காக ஸ்ரீஜேஷ் தனது குடும்பத்தினருடன் கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்துக்கு வந்தார். கடந்த சனிக்கிழமை நடக்க இருந்த பாராட்டு விழா ரத்து செய்யப்பட்டு, திங்கள்கிழமை அன்று நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

திங்கள்கிழமை அன்று காலையில் விழா பாராட்டு விழா நடைபெற இருந்தது. அதற்காக அவர் குடும்பத்தினருடன் காத்திருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் பாராட்டு விழா ரத்து செய்யப்பட்டு விட்டதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே, தள்ளி வைக்கப்பட்டு இருந்த விழா இரண்டாவது முறை ரத்து செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார் ஸ்ரீஜேஷ்.
தான் இந்த நிலையில் எதுவும் பேச விரும்பவில்லை என்று மட்டும் கூறிவிட்டு அவர் திருவனந்தபுரத்தை விட்டு வெளியேறினார். கேரள மாநில அரசின் கல்வித் துறை அமைச்சகம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் இடையே யார் இந்த பாராட்டு விழாவை நடத்துவது என்ற மோதல் ஏற்பட்டதாகவும், அந்த விவகாரம் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் சென்றதாகவும், அவர் இப்போதைக்கு பாராட்டு விழாவை ஒத்தி வைக்குமாறு கடந்த சனிக்கிழமை அன்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதை அடுத்து கடந்த சனிக்கிழமை அன்று பாராட்டு விழா ரத்து செய்யப்பட்டு விட்டது. அடுத்து திங்கள் கிழமை அன்று கல்வி அமைச்சகம் முதல்வர் முன்னிலையில் அவருக்கு வேறு பெயரில் விழா நடத்த இருந்தது. பின்னர் விளையாட்டுத் துறை அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த விழாவும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
ஆனால், இந்த தகவல் ஸ்ரீஜேஷ்-க்கு சொல்லப்படவில்லை. அதனால், அவர் பாராட்டு விழா நடக்க உள்ளதாக எண்ணி குடும்பத்தினருடன் வந்து அவமானப்படுத்தப்பட்டார். ஸ்ரீஜேஷ் கேரள கல்வித்துறை அமைச்சகத்தில் இணை இயக்குனராக இருக்கிறார். அதனால், அந்த அமைச்சகம் அவருக்கு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்து இருந்தது.
ஆனால், விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துர் ரஹிமான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். ஒலிம்பிக் பதக்கம் வென்ற அவருக்கு விளையாட்டுத் துறை அமைச்சகம் தான் பாராட்டு விழா நடத்த வேண்டும் என அவர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இந்த விவகாரம் முதலமைச்சரிடம் சென்று இருக்கிறது. அதன் காரணமாகவே இந்த பாராட்டு விழா இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இது அந்த மாநில அரசுக்கு அவமானத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.