பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய மல்யுத்த வீராங்கனை நிஷா தஹியா மகளிர் 68 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தார். அதில் வடகொரியாவின் பாக் சோல்-கம் என்ற வீராங்கனைக்கு எதிராக விளையாடினார்.
அந்தப் போட்டியில் அவர் முதல் ஏழு புள்ளிகளை மிக எளிதாக பெற்றார். வடகொரிய வீராங்கனையால் ஒரு புள்ளி கூட பெற முடியவில்லை. நிஷா தஹியா எட்டாவது புள்ளியை பெற்ற பின் அவரது வலது கையில் வலி ஏற்பட்டதை அடுத்து அவர் துடித்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன.

ஆனால், அதன் பின்பும் அவர் மீண்டும் வலியால் துடித்தார். மீண்டும் அவர் கலங்கிய நிலையில் துடித்தார். போட்டி மூன்றாவது முறையாக நிறுத்தப்பட்டது. அவரது வலது கையின் தோள்பட்டை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் என பல்வேறு இடங்களில் அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டது. அதன் பின் அவரால் போட்டியில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.
அதுவரை பின்தங்கி இருந்த வடகொரிய வீராங்கனை நிஷாவின் மோசமான நிலையை பயன்படுத்தி அதிரடியாக புள்ளிகளை பெற்று 10 - 8 என்ற புள்ளிக் கணக்கில் நிஷா தஹியாவை வீழ்த்தினார். இதை அடுத்து வடகொரிய வீராங்கனை வேண்டுமென்றே நிஷா தஹியாவின் தோள்பட்டை மற்றும் மணிக்கட்டுகளை தாக்கி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. போட்டி நடந்த வீடியோ காட்சிகளை வைத்து சிலர் இந்த குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.
இது குறித்து இந்திய தேசிய மல்யுத்த பயிற்சியாளர் வீரேந்தர் தஹியா பேசுகையில் வடகொரிய வீராங்கனை வேண்டுமென்றே இவ்வாறு செய்தார் என குற்றம் சுமத்தி இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது - "இது நூறு சதவீதம் உள்நோக்கத்தோடு செய்யப்பட்ட ஒரு செயல். நிஷாவை காயப்படுத்த வேண்டும் என அவர்கள் வேண்டுமென்றே இதை செய்துள்ளார்கள்." என்றார்.
மேலும், அதை வடகொரிய வீராங்கனை எப்படி செய்தார் எனவும் கூறினார். "வட கொரிய பயிற்சியாளர்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அவருக்கு சில அறிவுரைகள் சொல்லப்பட்டன. அதன் பின்பு அவர் நிஷாவின் தோள்பட்டையை குறி வைத்தார். அதன் மூலம் அவரிடம் இருந்து பதக்கத்தை பறித்துள்ளனர். நிஷா இந்த போட்டியை துவக்கிய விதத்தை பார்த்தால் நிச்சயம் அவருக்கு தான் பதக்கம் கிடைத்திருக்கும். ஆனால், அதை பறித்திருக்கிறார்கள். நிஷாவின் தாக்குதல், தடுப்பாட்டம் என அனைத்தும் கச்சிதமாக இருந்தது. இதே வட கொரிய வீராங்கனையை அவர் ஆசிய தகுதி சுற்றில் வீழ்த்தி இருந்தார். இந்த போட்டியில் நிஷா தோல்வி அடைய வாய்ப்பே இல்லை." என வீரேந்தர் கூறினார்.
இந்தப் போட்டி முடிந்த பின்னர் நிஷா தஹியாவை மருத்துவமனைக்கு ஸ்கேன் செய்ய அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு தோள் பட்டையில் கடுமையான காயம் ஏற்பட்டு இருப்பதாகவும், அவர் ஒலிம்பிக் தொடரில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாகவும் இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.