பாரீஸ் : அமெரிக்க அதிபர் இந்தியா வந்தபோது அகமதாபாத்தில் உள்ள ஏழை மக்கள் வாழும் வீடுகள் வெளியே தெரிந்த விடக்கூடாது என்பதற்காக திரைகள் மற்றும் தடுப்புகள் வைத்து மறைக்கப்பட்ட சம்பவம் உங்கள் அனைவருக்கும் நினைவு இருக்கலாம்.
ஆனால் பிரான்சில் ஒரு படி மேல் சென்று ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதால், பல வெளிநாட்டு விருந்தாளிகள் வருவார்கள் என்ற காரணத்தைக் காட்டி சுமார் ஒரு லட்சம் வீடற்ற மக்களை அப்புறப்படுத்த பிரான்ஸ் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வரும் 26 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த போட்டிக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் பாரிஸ் நகரில் அதிகளவு புலம்பெயர்ந்தோர்கள் வந்து தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். புலம்பெய்தவர்களுக்கு வேலை இல்லை. மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள அவர்கள் சாலைகளில் மற்றும் ஏதேனும் காலி மைதானத்தில் குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த வீடற்ற புலம் பெயர்ந்த நபர்களுக்கு வீடு கட்டி தருவதாக பிரான்ஸ் அரசு அண்மையில் அறிவித்தது. ஆனால் இன்று இதுவரை எந்த ஒரு வீடும் கட்டித் தரப்படவில்லை. ஆனால் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது என்பதற்காக புலம்பெயர்ந்த நபர்கள் பேருந்து மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
தெருவில் சுற்றி தெரியும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இடத்தில் யார் வீடற்ற நிலையில் இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு அதில் பலரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிகிறது.
பிரான்ஸ் நாட்டுக்கு வந்திருக்கும் புலம்பெயர்ந்தவர்கள் சுமார் 60% பேர் தற்காலிக குடியிருப்பில் மட்டுமே தங்கி இருக்கிறார்கள். இது பிரான்ஸ் நாட்டின் அழகை கெடுக்கிறது என்று காரணம் காட்டி அரசு அவர்களை நாடு கடத்தியும் அல்லது பாரிஸ் நகரை விட்டு வெளியேற்றியும் வருகிறது.