பாரிஸ்: ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்தியாவுக்காக முதன்முறையாக தங்கம் வென்ற பெண் என்ற வரலாற்று சாதனையை செய்தவர் பளு தூக்குதல் வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரி. 2000 சிட்னி ஒலிம்பிக் தொடரில் அவர் பளு தூக்குதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக பதக்கம் என்ற இந்திய பெண் என்ற பெருமையையும், இரும்பு பெண்மணி என்ற பெயரையும் பெற்றார்.
அவர் சண்டிகரை சேர்ந்தவர். அவரது 12 வது வயதில் மூத்த சகோதரி கிருஷ்ண குமாரிக்கு துணையாக தேசிய பளு தூக்குதல் பயிற்சி வகுப்புக்கு சென்று இருந்தார். 1990 ஆசிய விளையாட்டு போட்டிக்கான பயிற்சிகள் அங்கே வழங்கப்பட்டு வந்தன. அப்போது கர்ணம் மல்லேஸ்வரியின் உடல் வாகை பார்த்த முன்னாள் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன் லியோனிட் தரனென்கோ அவரை பெங்களூரு விளையாட்டு மையத்துக்கு அனுப்பி பயிற்சி அளிக்க வைத்தார்.

அதன் பின் அவர் ஜூனியர் தேசிய பளு தூக்குதல் பிரிவில் ஒரே ஆண்டில் ஒன்பது தேசிய சாதனைகளை முறியடித்தார். அதன் பின் அடுத்த ஆண்டு சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி பதக்கம் வென்றார். அங்கிருந்து தொடங்கிய அவரது பயணம் அற்புதமாக அமைந்தது. 1993 உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம், 1994-இல் முதன்முறையாக இந்தியாவுக்காக மகளிர் பளு தூக்குதல் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம், 1995-இல் மீண்டும் ஒரு தங்கம், 1996-இல் வெண்கலம் என உலக சாம்பியன்ஷிப்பில் வரிசையாக பதக்கங்களை அள்ளினார்.
1994 மற்றும் 1998 ஆசிய விளையாட்டு போட்டிகளில் அவர் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றிருந்தார். ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் முன்பே அவருக்கு 1994 ஆம் ஆண்டு அர்ஜுனா விருதும், 1999 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்த ஆண்டு 2000 சிட்னி ஒலிம்பிக் தொடரில் அவர் 69 கிலோ எடை பிரிவில் 110 கிலோ மற்றும் 130 கிலோ எடையை தூக்கி மொத்தம் 240 கிலோ எடையுடன் வெண்கலப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார். அவரது வெற்றி அன்று விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டிருந்த பல்லாயிரக்கணக்கான இந்திய பெண்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது.