பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் 50 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் இன்று இறுதிப் போட்டியில் பங்கேற்க இருந்த நிலையில் இந்த அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது.
அவர் மகளிர் 50 கிலோ மல்யுத்தப் பிரிவின் இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தார். அவர் இறுதிப் போட்டிக்கு முன்பு 50 கிலோவுக்கு 100 கிராம் வரை எடை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. மல்யுத்த போட்டி விதிகளின் படி ஒருவர் எந்த எடைப் பிரிவில் பங்கேற்கிறாரோ அந்த எடையை போட்டிகள் முடியும் வரை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும்.

சில கிராம் கூடுதல் எடை காரணமாக வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் இறுதிப் போட்டியில் பங்கேற்று தோல்வி அடைந்து இருந்தால் கூட அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்து இருக்கும். தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் எந்த பதக்கமும் கிடைக்காது என கூறப்படுகிறது. இது இந்தியாவின் ஒலிம்பிக் தங்கப் பதக்க கனவுக்கு பேரிடியாக இறங்கி உள்ளது. தற்போது 50 கிலோ எடைப் பிரிவில் யாருக்கும் வெள்ளிப் பதக்கம் கிடைக்காது எனவும், தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள் மட்டுமே இந்தப் பிரிவில் அளிக்கப்படும்.
இது குறித்து ஒலிம்பிக் தொடரில் பங்கேற்று இருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில், "மகளிர் மல்யுத்த 50 கிலோ வகுப்பில் இருந்து வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தியை இந்திய அணி வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது. இரவு முழுவதும் குழுவினரின் சிறந்த முயற்சிகள் செய்த போதிலும், அவர் இன்று காலை 50 கிலோவுக்கு மேல் சில கிராம் எடையுடன் இருந்தார். இதைப் பற்றி நங்கள் கருத்துகள் எதுவும் கூற விரும்பவில்லை. இந்த நேரத்தில் இந்திய அணி, வினேஷின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறது" என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியால் வினேஷ் போகட் மட்டுமில்லாமல், ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள ஒட்டுமொத்த வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் குழுவும் அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று முதல் இந்தியா முழுவதும் வினேஷ் போகட் எப்படியும் பதக்கம் வெல்வார் என கொண்டாட்ட மனநிலை இருந்தது. இப்போது இந்த சோக செய்தி மட்டுமே கிடைத்துள்ளது.