பாரிஸ் : 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இன்று ஒரே நாளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், பதக்கம் வெல்வதே லட்சியம் என மன உறுதியுடன் இந்த வெற்றிகளை கொண்டாடவில்லை.
மகளிர் 50 கிலோ மல்யுத்தப் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானை சேர்ந்த யூயி சசாகியை 3 - 2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். கடைசி 10 வினாடிகள் இருந்த போது அவர் 3 புள்ளிகளை எடுத்து இந்தப் போட்டியில் வெற்றி பெற்றார்.

இதை அடுத்து கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். கால் இறுதியில் உலகின் எட்டாம் வரிசை வீராங்கனையான உக்ரைனின் ஒக்ஷானா லிவாச்-சை எதிர் கொண்டார். இந்தப் போட்டியில் 7 - 5 என்ற புள்ளிக் கணக்கில் வினேஷ் போகட் வெற்றி பெற்றார். அரை இறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் அவர் ஒரு இம்மி அளவு கூட இந்த இரண்டு வெற்றிகளையும் கொண்டாடவில்லை.
மாறாக மிகவும் அமைதியாக காணப்பட்டார். அதன் மூலம், கடந்த இரண்டு ஒலிம்பிக் தொடர்களில் பறிபோன பதக்கத்தை இந்த முறை வென்று தீருவது என அவர் உறுதியாக இருக்கிறார் என கூறப்படுகிறது. அரை இறுதிப் போட்டி இன்று நள்ளிரவு 10.25க்கு நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் அவர் வென்றால் அவருக்கு பதக்கம் கிடைப்பது உறுதியாகி விடும்.