Vinesh Phogat வைத்த ட்விஸ்ட்.. உண்மை வெல்லும்.. மக்கள் அன்பால் மாறிய மனம்.. ஓய்வை வாபஸ் பெறுவாரா?
டெல்லி: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் கூடுதல் எடை காரணமாக இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகட், அப்போது தனது ஓய்வை அறிவித்திருந்தார். தற்போது இந்தியாவுக்கு திரும்பி இருக்கும் நிலையில், அவர் தனது ஓய்வு குறித்து இன்னும் சரியான முடிவை சொல்ல முடியவில்லை எனக்கு கூறி இருக்கிறார்.
இதன் மூலம் அவர் விரைவில் மீண்டும் மல்யுத்தத்துக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2024 ஒலிம்பிக் தொடரில் மகளிர் 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த விளையாட்டின் இறுதிப் போட்டிக்கு வினேஷ் போகட் தகுதி பெற்று இருந்தார். போட்டி நாள் அன்று காலையில் அவரது உடல் எடை 50 கிலோவுக்கு 100 கிராம் கூடுதலாக இருந்தது. இதை அடுத்து அவர் விதிப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு எதிரான சட்டப் போராட்டத்திலும் அவர் தோல்வி அடைந்தார்.

மனமுடைந்த வினேஷ் போகட் தான் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு 29 வயதாகும் நிலையில் அவரால் இன்னும் சில ஆண்டுகள் விளையாட முடியும் என்று கருத்து இருந்தது. இந்த நிலையில், அவர் நாடு திரும்பினார். அவருக்கு சக மல்யுத்த வீரர்கள் மற்றும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனால் ஆனந்த கண்ணீரில் மிதந்தார் வினேஷ் போகட்.
அதன் பின் தனது எதிர்காலத் திட்டம் குறித்து பேசிய அவர், "ஒலிம்பிக் பதக்கம் இல்லாதது எனக்கு ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளது. அது சரியாக சில காலம் ஆகும். எனது நாட்டின் மக்கள், எனது குடும்பம் மற்றும் கிராமத்தினர் என் மீது பொழிந்த அன்புக்காக நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். அது எனது காயத்தை குணப்படுத்த உதவும். நான் மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். ஆனால், இப்போதைக்கு என்னால் எதையும் சொல்ல முடியாது. நான் மல்யுத்தத்தில் இருந்து விடை பெறுவேனா அல்லது தொடர்வேனா? என்பது குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை." என்றார்.
மேலும், "நீங்கள் எனக்கு அளித்த நம்பிக்கை என்னை சரியான வழியில் வழி நடத்தும் என நம்புகிறேன். எங்களது போராட்டம் முடிந்து விடவில்லை. அதில் ஒரு பகுதியை தான் நான் கடந்து இருக்கிறேன். இன்னும் அது முடிவடையவில்லை. இது நீண்ட, நெடிய போராட்டம். நாங்கள் கடந்த ஓராண்டாக போராடிக் கொண்டு இருக்கிறோம். அது தொடரும். உண்மை வெல்ல வேண்டும் என நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். என்றார் வினேஷ் போகட். அவர் இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு எதிரான போராட்டத்தை தொடர போவதாக இதன் மூலம் அறிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications