பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த விளையாட்டில் மகளிர் 50 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்த வினேஷ் போகட் பதக்கம் வெல்வது உறுதி என இந்தியாவே எதிர்பார்த்து அந்த நொடிக்காக காத்திருந்த நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.
அவர் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். நேற்று இரவு முழுவதும் தனது எடையை குறைக்க அவர் போராடியதாகவும், தூக்கம் இல்லாமல் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் பின்பும் அவரால் 100 கிராம் எடையை குறைக்க முடியவில்லையா? என்ற சந்தேகம் எழலாம். ஆனால், அவர் 2 கிலோ கூடுதல் எடையுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

மல்யுத்த விளையாட்டின் விதிப்படி ஒரு போட்டியாளர் 50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றால் அந்த எடையை விட கூடுதலாக இருக்கக் கூடாது. அப்படி சில கிராம் எடை கூடுதலாக இருந்தாலும் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். போட்டியாளர்கள் தங்கள் எடை மாறாமல் தக்க வைத்துக் கொள்வது கடினம் என்பதால் தான், மல்யுத்தப் போட்டிகள் இரண்டு நாட்களில் நடத்தி முடிக்கப்படுகின்றன.
அந்த இரண்டு நாட்கள் மட்டும் போட்டியாளர்கள் தாங்கள் பங்கேற்கும் பிரிவுக்கு மேல் தங்கள் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில், மகளிர் 50 கிலோ எடைப் பிரிவில் முதல் நாள் போட்டிகள் செவ்வாயன்று நடத்தப்பட்ட போது, வினேஷ் போகட் 50 கிலோவுக்கு சற்று குறைவான எடையில் இருந்துள்ளார்.
ஆனால், அன்றைய இரவு அவரது எடை அதிகரித்து 52 கிலோவாக மாறியது. இதை அடுத்து பரபரப்பான வினேஷ் போகட் மற்றும் மல்யுத்த பயிற்சியாளர்கள் எடையை குறைக்க என்ன செய்யலாம் என ஆலோசித்து அவரை உடனடியாக உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வைத்துள்ளனர்.
இரவு முழுவதும் உணவை தவிர்த்து விட்டு அவர் இடைவிடாமல் உடற்பயிற்சியை மேற்கொண்டார். அவர் ஓட்டப் பயிற்சி, சைக்கிளிங், ஸ்கிப்பிங் என பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு தனது எடையை குறைத்தார். பின்னர் போட்டி நாளன்று காலை நடைபெறும் எடை சரிபார்த்தல் நிகழ்வில் பங்கேற்றார்.
அப்போது அவரது எடை 50 கிலோ 100 கிராம் என்பதாக இருந்தது. பல முறை எடையை சரி பார்த்த போதும் அவர் 100 முதல் 150 கிராம் வரை கூடுதலாகவே காட்டி இருக்கிறது. இதை அடுத்து விதிகளின் படி அதிகாரிகள் வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்தனர். தற்போது இறுதிப் போட்டி நடைபெறாது எனவும், வினேஷை எதிர்த்து ஆட இருந்த அமெரிக்க வீராங்கனை தங்கம் பதக்கம் பெறுவார் எனவும் கூறப்படுகிறது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி தனியாக நடைபெறும். ஆனால், வெள்ளிப் பதக்கம் யாருக்கும் கிடைக்காது என கூறப்படுகிறது.