பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் நிறைவு விழாவுக்கு பின் ஒலிம்பிக் இயக்குனர் நிக்கோலோ காம்ப்ரியானி பேசினார். அப்போது 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்பட முக்கிய காரணமே விராட் கோலி தான் எனக் கூறி இருக்கிறார். இது அவருக்கு அளிக்கப்பட்ட கவுரவம் என கோலி ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.
1900ஆம் ஆண்டில் முதல் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் விளையாட்டு நடத்தப்பட்டது. அப்போது கிரேட் பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் நாடுகள் ஒரே ஒரு கிரிக்கெட் போட்டியில் ஆடின. அப்போது மற்ற நாடுகள் ஏதும் கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்காததால் கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக்கில் இருந்து நீக்கப்பட்டது.

1900மாவது ஆண்டில் கிரிக்கெட் விளையாட்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் மட்டுமே பிரபலமாக இருந்தது. அதன் பின்னரே இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் அணிகள் உருவானது. 1950க்கு பின்னரே ஆசிய கண்டத்தில் கிரிக்கெட் வளரத் துவங்கியது.
அப்போதும் கிரிக்கெட் போட்டிகள் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படவில்லை. ஏனெனில், மொத்தமே 10 நாடுகள் மட்டுமே தீவிரமாக கிரிக்கெட் ஆடி வந்தன. ஒலிம்பிக்கில் ஒரு விளையாட்டு சேர்க்கப்பட குறைந்தது 75 நாடுகளில் அந்த விளையாட்டு விளையாடப்பட வேண்டும். பல நாடுகளில் கிரிக்கெட் அணிகள் இருந்தாலும் அவை சர்வதேச தரத்தில் இல்லை என்ற குறை இருந்தது.
டி20 போட்டிகள் வந்த பின்னர் அந்த நிலை மாறியது. இப்போது தீவிரமாக டி20 கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முயற்சி செய்தது. அதற்கு விராட் கோலி பெரிய அளவில் உதவி இருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் 31.5 கோடி ரசிகர்கள் விராட் கோலியை பின்தொடர்கிறார்கள். உலகிலேயே அதிக ரசிகர்களால் பின் தொடரப்படும் மூன்றாவது விளையாட்டு வீரர் விராட் கோலி. கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி முதல் இரண்டு இடங்களில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் ஒலிம்பிக் இயக்குனர் நிக்கோலோ காம்ப்ரியானி, ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட விராட் கோலியின் புகழ் முக்கிய காரணமாக இருந்தது என குறிப்பிட்டு இருக்கிறார்.