பாரிஸ் : 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இன்று (ஆகஸ்ட் 7) இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான நாளாகும். இன்று இந்தியாவுக்கு இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மல்யுத்தம் மற்றும் பளு தூக்குதலில் இந்தியாவின் இரண்டு வீராங்கனைகள் நம்பிக்கை அளித்து வருகின்றனர்.
மகளிர் 50 கிலோ எடை பிரிவு மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகட் இறுதிப்போட்டியில் பங்கேற்கிறார். இதில் வெற்றி பெற்றால் அவருக்கு தங்கப்பதக்கம் கிடைக்கும். ஒருவேளை தோல்வி அடைந்தாலும் கூட அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்கும். எனவே, இன்று இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது. அது தங்கப்பதக்கமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

அடுத்து மகளிர் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்கிறார். அவர் உலகின் முன்னணி பளு தூக்குதல் வீராங்கனை ஆவார். அவர் மகளிர் 49 கிலோ எடை பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இதற்கு முன் அவர் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் தொடரில் மூன்று தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று இருக்கிறார். காமன்வெல்த் கேம்ஸ் தொடர்களில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி வென்று இருக்கிறார்.
ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்று இருக்கிறார். பளு தூக்குதல் உலக சாம்பியன்ஷிப் தொடர்களில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வென்று இருக்கிறார். 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் வெள்ளி பதக்கம் வென்று இருக்கிறார்.
அவர், ஏற்கனவே ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று இருக்கும் நிலையில், இன்று அதை தங்கப் பதக்கமாக மாற்றுவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மகளிர் மல்யுத்தம் மற்றும் மகளிர் பளு தூக்குதல் ஆகிய இந்த இரண்டு போட்டிகளுக்கும் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
வினேஷ் போகட் பங்கேற்கும் மகளிர் 50 கிலோ எடை பிரிவு மல்யுத்தம் இறுதிப் போட்டி இன்று இரவு 9:45க்கு நடைபெற உள்ளது. பளு தூக்குதல் மகளிர் 49 கிலோ எடை பிரிவு போட்டி இன்று இரவு 11 மணிக்கு நடைபெற உள்ளது. அதில் மீராபாய் சானு பங்கேற்கிறார்.