டெல்லி: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய மகளிர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் இறுதிப்போட்டி வரை முன்னேறியும் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரது கணவர் சோம்வீர் ரத்தி அவருக்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உதவவில்லை என கூறி இருக்கிறார்.
ஒலிம்பிக் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக வினேஷ் போகட் 100 கிராம் கூடுதல் எடை இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். அதற்கு எதிராக இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் வினேஷ் போகட் விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டு இருந்தனர். அதில் வினேஷ் போகட்டுக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதை அடுத்து அவர் இந்தியாவுக்கு திரும்பினார்.

டெல்லி விமான நிலையத்தில் அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் டெல்லி மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைக் கண்டு ஆனந்தக் கண்ணீரில் மிதந்தார் வினேஷ் போகட். இதனிடையே அவரது கணவரும், தேசிய மல்யுத்த வீரருமான சோம்வீர் ரத்தி பேட்டி அளித்தார்.
அவர் பேசுகையில், "இந்த தேசமே வினேஷ் மீது அன்பை பொழிகிறது. அதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வினேஷ் போகட் மீது மக்கள் தங்கள் அன்பை செலுத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. அவரது சக மல்யுத்த வீரர்களை பார்த்தவுடன் அவர் உணர்ச்சி பெருக்கில் இருந்தார். இப்படி ஒரு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. வேறு எதைக் குறித்தும் இப்போதைக்கு என்னால் அதிகம் பேச முடியாது. இது எங்களுக்கு கடினமான நேரம். மல்யுத்த கூட்டமைப்பும் எங்களுடன் நிற்கவில்லை. யாருமே ஒரு வீரருடன் நிற்கவில்லை என்றால் அவர் எப்படி நன்றாக செயல்படுவார்?" என்று கேள்வி எழுப்பினார் சோம்வீர் ரத்தி.
மேலும், "வினேஷ் போகட் இளம் வீராங்கனைகளுக்கு முன்னுதாரணமாக இருப்பார். அவரைப் பார்த்து பெற்றோர் பலரும் மல்யுத்தத்திற்கு தங்கள் பெண்களைக் கொண்டு வருவார்கள். ஆனால், அரசு தான் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஒலிம்பிக் கிராமத்தில் சக இந்திய வீரர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். தனது ஓய்வு குறித்து வினேஷ் விரைவில் முடிவு செய்வார்." என்றார் சோம்வீர் ரத்தி.