பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் 100 கிராம் கூடுதல் எடை இருந்ததால் இறுதிப் போட்டிக்கு முன் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்த விவகாரத்தில் சதி நடந்ததாக சிலர் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தவறு செய்தது யார்? என்ற விவாதமும் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. உண்மையில் வினேஷ் போகட் விவகாரத்தில் சதி நடந்ததா? என்று பார்ப்போம்.
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் மல்யுத்த விளையாட்டில் மகளிர் 50 கிலோ எடை பிரிவில் வினேஷ் போகட் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். முதல் நாள் ஆட்டத்தில் அவர் மூன்று போட்டிகளில் பங்கேற்று மூன்றிலும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தார். அவர் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்று இருந்த நிலையில் முதல் நாள் அன்று அவரது எடை 49.9 கிலோவாக இருந்தது.

ஆனால், இறுதிப் போட்டி நடக்க இருந்த நாளன்று காலையில் நடந்த எடை சரி பார்ப்பின் போது 50.100 கிலோ எடையுடன் இருந்தார். அதாவது, 100 கிராம் கூடுதல் எடையுடன் இருந்தார். முதல் நாள் அன்று இரவே அவரது எடை 52.7 கிலோவாக அதிகரித்து விட்டது. அதில் இருந்து அவர் 50.100 கிலோவாக தனது எடையை குறைத்து இருக்கிறார்.
இதில் எந்த விதமான சதியும் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில், மல்யுத்த விளையாட்டில் ஈடுபடும் வீரர்கள் தங்களின் இயல்பான எடையை விட குறைந்த எடை பிரிவில் பங்கேற்கவே முயற்சி செய்வார்கள். அதனால், அவர்கள் பயிற்சியில் இருந்தே தங்களின் எடையை வெகுவாக குறைத்து வைத்திருப்பார்கள்.
அதனால், அவர்களின் எடை ஒரே நாளிலேயே நான்கு, ஐந்து கிலோ வரை கூட எளிதாக அதிகரிக்கும். குறிப்பாக அவர்களின் உடல் எடையில் நீரின் அளவு அதிகரித்தால் எடை விரைவில் அதிகரிக்கும். மேலும், மல்யுத்தப் போட்டிகளில் விளையாடும் போது அவர்களது உடலில் அழுத்தம் ஏற்படுவதால் சதை பற்று (muscle mass) அதிகரிக்கும்.
உடலில் நீரின் எடை எவ்வளவு அதிகரித்தாலும் ஒரே இரவில் அதை குறைத்து விட முடியும். அதற்காக நீராவிக் குளியல் மற்றும் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள். அதன் மூலம் அவர்கள் உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறும். அப்படி நடக்கும் போது அவர்களது உடல் எடை வேகமாக குறைந்துவிடும். ஆனால், சதை பற்றின் எடை சில நூறு கிராம்கள் அதிகரித்தாலும் அதை ஒரே இரவில் குறைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.
ஒவ்வொரு போட்டியாளரின் உடல்வாகும் வெவ்வேறாக இருக்கும். சிலருக்கு சதைப்பற்று விரைவில் அதிகரிக்கலாம். சிலருக்கு நீரின் எடை மட்டுமே அதிகரிக்கலாம். உதாரணத்திற்கு இதே ஒலிம்பிக் தொடரில் இந்திய மல்யுத்த வீரர் அமன் செஹ்ராவத் ஒரே இரவில் 4.5 கிலோ எடையை குறைத்து இருக்கிறார்.
அதற்கு காரணம் அவரது உடல் எடையில் நீரின் எடை மட்டுமே அதிகரித்து இருக்கலாம். அதை அவர் ஒரே இரவில் குறைத்து இருக்கிறார். அதே சமயம், வினேஷ் போகட் உடலில் நீரின் எடை மட்டுமின்றி, சதைப் பற்றும் அதிகரித்து இருக்கலாம். அவர் ஒரே இரவில் 2.7 கிலோ கூடுதல் எடையில், 2.6 கிலோ வரை குறைத்து இருக்கிறார். கடைசி 100 கிராம் எடையை அவரால் குறைக்க முடியவில்லை.
இந்த மல்யுத்த வீரர்களுக்கு ஏற்படும் இந்த எடை அதிகரிப்பு மற்றும் ஒரே இரவில் அதை குறைப்பது ஆகிய நடைமுறைகள் வழக்கமான ஒன்றுதான் என்பதால் இதில் எந்த விதமான சதியும் நடந்து இருக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை சிறிய சந்தேகம் இருந்தாலும் வினேஷ் போகட் அல்லது அவருக்கு நெருக்கமானவர்கள் தங்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தி இருப்பார்கள். ஆனால், யாருமே இதுவரை ஒரு சிறிய சந்தேகத்தை கூட வெளிப்படுத்தவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
சிலர் வினேஷ் போகட்டின் ஊட்டச்சத்து நிபுணர் மீதுதான் தவறு என கூறுகிறார்கள். ஒருவகையில் பார்த்தால் அவர் தான் இந்த மோசமான நிகழ்வுக்கு பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில், அவர் வினேஷ் போகட்டை மட்டுமே கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல் எடை எப்படி அதிகரிக்கும், அவரது உடல்வாகு எதை ஏற்கும், எதை ஏற்காது, எப்படி அவரது எடையை விரைவாக குறைக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை அவர் முழுமையாக அறிந்து இருக்க வேண்டும்.
அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் அவர் மீது தவறு இருக்க வாய்ப்புள்ளது. வினேஷ் போகட் மட்டுமே இதற்கு பொறுப்பு என கூற முடியாது. ஏனெனில், ஒரே நாளில் அவர் மூன்று போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதற்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீர் அருந்தாமல் அவருக்கு போட்டிகளில் பங்கேற்கும் சக்தி கிடைக்காது.
அதை ஊட்டச்சத்து நிபுணர் சரியாக நிர்வகித்து இருக்க வேண்டும். அங்கேதான் தவறு நடந்திருக்க கூடும். தற்போது வினேஷ் போகட்டின் வழக்கு விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இன்று இரவு (ஆகஸ்ட் 13) அதன் முடிவு வெளியாகலாம் என கூறப்படுகிறது.