பாரிஸ்: 2024 ஒலிம்பிக் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது. இதே பாரிஸில் 124 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இரண்டாவது ஒலிம்பிக் தொடரில் மாபெரும் மைல்கல் நிகழ்வு ஒன்று நடந்தது. 1896இல் முதல் ஒலிம்பிக் தொடர் நடந்த போது அதில் ஒரு வீராங்கனை கூட கலந்து கொள்ளவில்லை. ஆண்களுக்கான ஒலிம்பிக் தொடராகவே இருந்தது அந்த தொடர்.
அடுத்து 1900 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கும் இடம் அளிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இதை அடுத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பெண்களை அனுமதித்தது. 1900 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்கள் முதல் முறையாக போட்டியிட்டனர். மொத்தம் 997 விளையாட்டு வீரர்களில் 22 பெண்கள் டென்னிஸ், படகோட்டம், குரோக்கெட், குதிரையேற்றம் மற்றும் கோல்ஃப் ஆகிய ஐந்து விளையாட்டுகளில் போட்டியிட்டனர்.

ஒலிம்பிக் தொடரில் பெண்களை சரி சமமாக பங்கேற்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் அப்போது ஒரு விதி ஏற்படுத்தப்பட்டது. ஒலிம்பிக் சாசனம், பகுதி 1, விதி 2.8, பின்வருமாறு கூறுகிறது: "ஆண்கள் மற்றும் பெண்களின் சமத்துவக் கொள்கையை செயல்படுத்தும் நோக்கில் அனைத்து மட்டங்களிலும் மற்றும் அனைத்து கட்டமைப்புகளிலும் பெண்களை விளையாட்டில் ஊக்குவிக்கவும் மற்றும் ஆதரிக்கவும் வேண்டும்."
1900 முதல் பெண்கள் பங்கேற்ற போதும் அனைத்து விளையாட்டுகளிலும் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டி 1991 முதல், ஒலிம்பிக் தொடரில் சேர விரும்பும் எந்த ஒரு புதிய விளையாட்டுக்கும் பெண்களுக்கான போட்டிகள் இருக்க வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டது. ஆனாலும், அதற்கு முன்பிருந்தே ஒலிம்பிக்கில் இடம் பெற்று இருக்கும் குத்துச்சண்டை விளையாட்டில் மட்டும் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.
லண்டனில் நடந்த 2012 ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டிகள் சேர்க்கப்பட்டன. அப்போது தான் பெண்கள் ஒலிம்பிக்கில் இடம் பெற்று இருந்த அனைத்து விளையாட்டுகளிலும் போட்டியிட்டனர். அது மற்றொரு மைல்கல்லாக அமைந்தது. இதை அடுத்து 2016ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றவர்களில் 45 சதவீதம் பேர் பெண்களாக இருந்தனர். அதன் மூலம், பெண்கள், ஆண்களுக்கு நிகராக ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க தொடங்கி மற்றொரு மைல்கல்லை ஏற்படுத்தினர்.