பாரீஸ் : ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது பல விளையாட்டு வீரர்களின் கனவாக இருக்கின்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவுக்கு ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது உடல், ஆவி என அனைத்தையும் கொடுத்து நாட்டுக்காக உழைக்கிறார்கள்.
அப்படி வெற்றி பெற்று பதக்கம் வெல்லும் போது அதனை ஏன் சில வீரர்கள் கடித்துக் கொண்டாடுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் உள்ளிட்ட வீரர்கள் எல்லாம் இப்படி தங்கத்தை வாங்கி அதனை கடித்த படி போட்டோக்கு போஸ் கொடுப்பார்கள்.

இந்த வெற்றி கொண்டாட்ட பின்னணியில் என்ன இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். இது போன்று கோப்பைகள் பதக்கங்களை கடிப்பது கடந்த 10, 20 ஆண்டுகளாக தான் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக டென்னிஸ் விளையாட்டில் கோப்பையை வெல்லும் நட்சத்திர வீரர் நடால், அதனை கடித்து கொண்டாடுவது போல் போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்.
அப்படிப்பட்ட ஒரு கொண்டாட்டம் ஸ்டைல் தான் தற்போது ஒலிம்பிக் வீரர்கள் மத்தியிலும் இருக்கின்றது. பண்டைய காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை தான் மக்கள் பயன்படுத்தி பொருட்களை வாங்கி இருக்கிறார்கள். அப்படி கொடுக்கப்படும் தங்க காசு உண்மையானதா என்பதை சோதிக்க பண்டைய காலத்தில் மக்கள் அதனை கடிப்பார்களாம்.
இதன் மூலம் தங்க துகள்கள் பற்களில் பட்டால் அது உண்மையான தங்கம் என்றும், அப்படி இல்லை என்றால் அது பொய்யான தங்கம் என்று கண்டுபிடிப்பார்களாம். ஆனால் தற்போது வீரர்கள் கடிப்பது இது உண்மையான தங்கமா இல்லையா என்று சோதிப்பதற்கு கிடையாது. இது ஒரு கொண்டாட்டத்தின் பகுதி என்றுதான் கூறுகிறார் ஒலிம்பிக் வரலாற்று ஆசிரியர் டேவிட்.
வீரர்கள் இப்படி தானாக செய்வது கிடையாது. புகைப்படக் கலைஞர்கள் தான் இது போல் செய்யுங்கள் என வீரர்களிடம் கேட்கிறார்கள். இப்படி வித்தியாசமாக தங்க பதக்கங்களை கடிக்கும் போது, அந்த போட்டோவுக்கு அது மேலும் அழகை சேர்க்கிறது என்று புகைப்படக் கலைஞர்கள் நினைக்கிறார்கள். அது காலத்தால் அழியாமல் நிற்கும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். எனவே புகைப்பட கலைஞர்தான் இதனை செய்ய சொல்லி இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதேபோன்று குளிர்கால ஒலிம்பிக்கில் ஜெர்மனி வீரர் டேவிட் முல்லர் என்ற வீரரை புகைப்பட கலைஞர்கள் பதக்கத்தை கடிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்ததாகவும், அதனை அவர் செய்த போது அவருடைய பல்லு உடைந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொண்டாட்டத்தில் ஈடுபடும் நிலையில் இப்படி பதக்கத்தை கடிப்பதும் ஒரு கொண்டாட்டம் ஸ்டைலாக மாறிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.