டெல்லி: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா ஒரு தங்கப் பதக்கம் கூட வெல்லவில்லை. ஒலிம்பிக்கில் இந்தியாவின் அனைத்து போட்டிகளும் முடிவடைந்துள்ள நிலையில் 6 பதக்கங்களுடன் இந்தியா 71 வது இடத்தில் உள்ளது. இந்த முறை இந்திய இரண்டு அல்லது மூன்று தங்கப் பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், ஒரு தங்கப் பதக்கம் கூட வெல்லவில்லை. ஒரு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்களை மட்டுமே இந்தியா வென்றது. இந்த நிலைக்கு என்ன காரணம்? என்ன செய்தால் இந்தியா இனி வரும் ஒலிம்பிக் தொடர்களில் அதிக தங்கப் பதக்கங்களை வெல்லும்? என்பது குறித்து பார்க்கலாம்.

இந்த ஒலிம்பிக் தொடரில் அதிக பதக்கங்களை வென்ற முதல் பத்து நாடுகளை எடுத்துக் கொண்டால் அவை அனைத்துமே அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அனுப்பி இருப்பதை நாம் காணலாம். அமெரிக்கா 592, சீனா 388, ஆஸ்திரேலியா 460, ஜப்பான் 403, பிரான்ஸ் 573 வீரர்களை அனுப்பி உள்ளது. இந்த ஐந்து நாடுகளும் பதக்கப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
இந்தியாவை காட்டிலும் மிக, மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகள் அதிக வீரர்களை அனுப்பி உள்ளன. ஆனால், இந்தியா இந்த முறை 117 வீரர்களை மட்டுமே அனுப்பி இருந்தது. இதுவே இந்தியா குறைந்த அளவிலான பதக்கங்களை வெல்ல முக்கிய காரணம். 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இருந்து 500 வீரர்களை ஒலிம்பிக் தொடருக்காக தயார் செய்து அனுப்ப முடியாதா?
வெறும் 2.6 கோடி மக்கள் தொகை கொண்ட ஆஸ்திரேலியா 460 வீரர்களை அனுப்பி 18 தங்கம் உட்பட 50 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தில் உள்ளது. வெறும் 51.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்து 195 வீரர்களை அனுப்பி 9 தங்கம் உட்பட 18 பதக்கங்களை வென்று 12வது இடத்தில் உள்ளது. அப்படி என்றால் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இருந்து 500 வீரர்களை அனுப்புவது கடினமா? பொருளாதாரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை விட இந்தியா பின்தங்கிய நாடா?
ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள அத்தனை விளையாட்டுக்களையும் ஆர்வத்துடன் விளையாட இந்தியாவில் வீரர்கள் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு வழி காட்டவும், பயிற்சி அளிக்கவும் போதிய வசதிகளும், அதை எப்படி தொடங்குவது என்பதற்கான விழிப்புணர்வும் இல்லை. அதுதான் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. இந்த குறையை போக்குவதற்கு இந்தியா அடுத்த ஒலிம்பிக் தொடரில் குறைந்தது 400 அல்லது 500 வீரர்களை அனுப்ப வேண்டும் என முடிவு செய்தாலே போதும்.
அந்த முடிவை எடுத்தால் மட்டும் எப்படி இந்தியா அதிக பதக்கங்களை வெல்ல முடியும்? அதிக வீரர்களை அனுப்ப வேண்டும் என முடிவு செய்தால் ஒலிம்பிக்கில் உள்ள அத்தனை விளையாட்டுக்களுக்கான வீரர்களையும் தேர்வு செய்ய வேண்டிய தேவை ஏற்படும். அதற்கு ஒவ்வொரு விளையாட்டுக்கும் உலகத் தரம் வாய்ந்த பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும்.
மேலும், அந்த விளையாட்டுக்களுக்கு தேசிய அளவிலான, மாநில அளவிலான போட்டிகளை நடத்த வேண்டும். இதை செய்ய ஆரம்பித்தாலே அவை பள்ளி, கல்லூரி அளவில் மாணவர்களை சென்றடையும். தங்களுக்கு விருப்பமான விளையாட்டுகளை மாணவர்கள் தேர்வு செய்து விளையாட முடியும்.
சில விளையாட்டுக்களுக்கு அதிக பணம் தேவைப்படும். திறமை இருப்பவர்களுக்கு விளையாட்டுக்கான அனைத்து நிதி உதவிகளையும் செய்யும் வகையிலான நடைமுறைகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும். அதன் பின்பு மாநில அளவிலான போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்பதன் மூலம் சிறந்த திறமையாளர்களை அடையாளம் காண முடியும்.
பின்னர், அந்த விளையாட்டுக்களுக்கான உலக தரத்தில் ஆன பயிற்சி மையங்களை இந்தியாவிலேயே அமைத்து, தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சிகளை அளிக்க வேண்டும். இவற்றை செய்ய அடுத்த நான்கு ஆண்டுகள் மட்டுமே கூட போதாது. ஆனால், இப்போது இருந்தே அதிக வீரர்களை அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தை செயல்படுத்த தொடங்கினால் மட்டுமே அடுத்த இரண்டு அல்லது மூன்று ஒலிம்பிக் தொடர்களுக்கு பின் இந்தியா விளையாட்டில் சாதனை புரிய முடியும்.