டெல்லி: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க இந்தியாவைச் சேர்ந்த 117 வீரர், வீராங்கனைகள் சென்றுள்ளனர். அவர்களுடன் 68 பயிற்சியாளர்கள் மற்றும் 50 உதவியாளர்கள் சென்றுள்ளனர். இந்த நிலையில், வில்வித்தை அணியின் வெளிநாட்டு பயிற்சியாளரான பேக் வூங் கி இந்தியாவுக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து அவர் கடும் கோபம் கொண்டுள்ளார்.
பேக் வூங் கி தென்கொரியாவை சேர்ந்தவர் ஆவார். 2012 லண்டன் ஒலிம்பிக் தொடரில் அவரிடம் பயிற்சி பெற்ற தென் கொரிய வீரர்கள் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றனர். அதன் காரணமாகவே அவரை இந்திய வில்வித்தை சங்கம், இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு ஒப்பந்தம் செய்து இருந்தது. கடந்த ஓராண்டாக இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். அவரிடம் பயிற்சி பெற்ற பின் 2023 ஆசிய விளையாட்டு தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் வெள்ளி பதக்கங்களை வென்றனர். ஷாங்காய் வில்வித்தை உலகக் கோப்பையில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றது.

இப்படி இந்திய வில்வித்தை வீரர்களின் வெற்றிகரமான பயிற்சியாளராக இருந்தார் பேக் வூங் கி. இந்த நிலையில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு ஆறு இந்திய வீரர், வீராங்கனைகளுடன் அவரும் சென்று இருந்தார். அவருடன் இரண்டு இந்திய பயிற்சியாளர்கள் மற்றும் இரண்டு இந்திய உதவியாளர்கள் வில்வித்தை வீரர்கள் குழுவுடன் சென்றிருந்தனர்.
இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கம் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடியும் எனக் கூறி வெளிநாட்டு பயிற்சியாளர் என்ற அடிப்படையில் பேக் வூங் கி-க்கு பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் தங்குவதற்கான அனுமதி கடிதத்தை அளிக்க முடியாது என கடைசி நேரத்தில் பின்வாங்கி விட்டது.
அவர் தற்போது பாரிஸில் இந்திய வீரர்களுடன் இருக்கும் நிலையில் இந்திய வில்வித்தை சங்கம் அவரை இந்தியாவுக்கு அழைத்து இருக்கிறது. இந்த மோசமான நிர்வாக குளறுபடியால் பேக் வூங் கி மிகவும் அதிருப்தி அடைந்து இருக்கிறார். அடுத்த ஆகஸ்ட் 30 உடன் அவரது ஒப்பந்தம் நிறைவடையும் நிலையில், தன்னை இந்திய ஒலிம்பிக் சங்கம் அவமானப்படுத்தி விட்டதாகவும், தான் இப்போதே தென்கொரியாவுக்கு செல்ல விரும்புவதாகவும், இனியும் இந்திய அணியுடன் பணி செய்ய விரும்பவில்லை எனவும் கோபத்தை கொட்டி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசுகையில், "இந்தியா முதன்முறையாக ஒலிம்பிக்கில் வில்வித்தையில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக கடந்த ஓராண்டாக உழைத்து வருகிறோம். ஆனால், வெளிநாட்டு பயிற்சியாளர் என்பதற்காக என்னை அங்கிருந்து நீக்கியது மிகப்பெரிய தவறு. இது எங்களின் திட்டம் மற்றும் குறிக்கோளுக்கு எதிரானது. இந்திய வில்வித்தை வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், இப்போது நான் அந்த அணியுடன் இருக்க முடியாது என்பது துரதிர்ஷ்டவசமானது. என்னால் இப்போது அவர்களுக்கு மெசேஜ் மட்டுமே அனுப்ப முடியும். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பதக்கம் வெல்வார்கள் என நம்புகிறேன்." இவ்வாறு பேக் வூங் கி கூறியிருக்கிறார்.
இந்திய வில்வித்தை வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வெல்லாமல் போனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க வாய்ப்பு உள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து வெளிநாட்டு பயிற்சியாளரை வரவழைத்து, அவருடன் பல்வேறு நாடுகளுக்கு இந்திய வீரர்களை அனுப்பி பயிற்சி மேற்கொள்ள வைத்து கடைசியில் ஒலிம்பிக் போட்டிகளின் போது அவரை வீரர்களிடம் இருந்து பிரித்து இருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.