சென்னை: சுதந்திரத்தின் போது இந்தியாவில் கிரிக்கெட்டை விடவும் ஹாக்கி மற்றும் கால்பந்து விளையாட்டுகள் பிரபலமான ஒன்றாக இருந்துள்ளது. அதற்கான முக்கிய சான்றாக ஒலிம்பிக் போட்டிகள் இருக்கின்றன. இதுவரை ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தங்கப் பதக்கம் ஹாக்கி விளையாட்டின் மூலமாகவே கிடைத்துள்ளது.
அதேபோல் இந்திய கால்பந்து அணியும் 1948 முதல் 1960 வரை தொடர்ச்சியாக 4 முறை ஒலிம்பிக் தொடருக்கு தகுதிபெற்று சாதனை படைத்துள்ளனர். 1948ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக் தொடரில் விளையாடியதன் மூலமாக இந்திய கால்பந்து அணி தங்களின் முதல் சர்வதேச போட்டியில் விளையாடியது. அந்த ஒலிம்பிக்கில் விளையாடிய 11 வீரர்களில் 8 வீரர்கள் ஷூ இல்லாமல் விளையாடி இருக்கின்றனர்.

பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இருந்தாலும், இந்திய அணியின் செயல்பாடுகள் பலரையும் வியப்படைய செய்தது. இந்தியாவுக்காக முதல் சர்வதேச கோல் அடித்த வீரராக சாரங்கபாணி ராமன் வரலாறு படைத்தார். இதன்பின் 1952ல் ஹெல்சங்கியில் நடந்த ஒலிம்பிக்கில் யுகோஸ்லேவியாவிடம் 10-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.
இதன்பின் 1956ஆம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக் தொடரில் சொந்த மண்ணில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியது. இதன்பின் அரையிறுதிச் சுற்றில் மீண்டும் யுகோஸ்லேவியாவிடம் தோல்வியடைய, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியிலும் பல்கேரியாவிடம் 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் 4வது இடத்தில் நிறைவு செய்தது.
தொடர்ந்து 1960ஆம் ஆண்டு ரோமில் நடந்த ஒலிம்பிக் தொடரின் குரூப் சுற்றில் பிரான்ஸ் அணியுடனான ஆட்டத்தில் 1-1 என்ற இந்திய அணி சமன் செய்தது. இதனால் பெரு அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியடைய வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய போது, 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் குரூப் சுற்றுடன் இந்திய அணி நடையை கட்டியது. இதுவரை ஒலிம்பிக் வரலாற்றில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி ஒரு வெற்றி, ஒரு டிரா மற்றும் 6 தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.