பாரிஸ்: 33வது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பாக மொத்தமாக 117 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் மகளிருக்கான குத்துச்சண்டையில் 54 கிலோ எடை பிரிவில் இந்தியா சார்பாக ஹரியானாவைச் சேர்ந்த பிரீத்தி பவார் களமிறங்கினார். இவர் வியட்நாமைச் சேர்ந்த வோ தி கிம்-ஐ எதிர்கொண்டார்.
பாரிஸ் வருவதற்கு முன்பாக இந்திய குத்துச்சண்டை வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஜெர்மனியில் சிறப்பு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பயிற்சியில் இருந்த பிரீத்தி பவாருக்கு திடீரென உடல்நிலை பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக ஜெர்மனியில் பயிற்சியை மேற்கொள்ள முடியாமல், அங்குள்ள மருத்துவமனையில் 3 நாட்கள் படுத்த படுக்கையாக இருந்தார்.

21 வயதாகும் பிரீத்தி பவார், ஆசியப் போட்டிகளில் 54 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று தீவிரமாக பயிற்சி மேற்கொண்டவர், திடீரென படுத்த படுக்கையாக இருந்தது பயிற்சியாளர்கள், சக வீரர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் அங்கிருந்து பாரிஸ் வந்தாலும், அவர் முழு ஃபிட்னஸை எட்டவில்லை.
அவரின் முழு திறமையும் வெளிப்படுமா என்று உடனிருந்தவர்களும் சந்தேகத்துடனே இருந்தனர். இதுதொடர்பாக இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவர் ஹேமந்த் குமார் பேசுகையில், பிரீத்தி பவாருக்கு சிறிய பிரச்சனை தான். அது குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை என்று மைகேல் தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

ஆனால் ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வெல்லும் ஃபிட்னஸை எட்டிவிட்டாரா என்ற கேள்வி இருந்தது. இத்தனை கேள்விகளுடன் போட்டியில் களமிறங்கிய பிரீத்தி பவார், களத்தில் மிரட்டிவிட்டார். முதல் சுற்றை 3:2 என்ற கணக்கில் கைப்பற்ற, 2வது சுற்றை ஆக்ரோஷத்துடன் விளையாடினார்.
அதேபோல் ஒவ்வொரு குத்தும் சரியான வேகத்துடனும் கட்டுப்பாட்டுடனும் இருந்தது ஆச்சரியத்தை கொடுத்தது. 2வது சுற்றிலும் வென்ற பிரீத்தி பவார், 3வது சுற்றிலும் அழுத்தத்தை சரியாக கையாண்டு வெற்றிபெற்றார். இதனால் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருந்து சிகிச்சை பெற்றவரா இப்படி கலக்கினார் என்று ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பிரீத்தி பவார் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.