பாரிஸ்: ஒலிம்பிக் தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது பாராலிம்பிக்ஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த முறை நடந்த பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா சார்பாக பங்கேற்ற வீரர்கள், வீராங்கனைகள் மொத்தமாக 19 பதக்கங்களுடன் திரும்பினர். இம்முறை அதனைவிட அதிகளவிலான வீரர்கள் சென்றிருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்கேற்ப முதல் நாள் போட்டிகளிலேயே இந்திய வில்வித்தை வீராங்கனையான ஷீத்தல் தேவி உலக சாதனையை ஜஸ்ட் மிஸ்ஸில் தவறவிட்டுள்ளார். மகளிருக்கான வில்வித்தை போட்டியில் ரேங்கிங் சுற்றுகள் நடத்தப்பட்டன. இந்த ரேங்கிங் சுற்று மூலமாக அணிகள் பிரிக்கப்படும். இதில் 17 வயதாகும் இந்திய வீராங்கனையான ஷூத்தல் தேவி 703 புள்ளிகள் பெற்று அசத்தியுள்ளார்.

இதனால் ஒரேயொரு புள்ளியில் உலக சாதனை மிஸ்ஸானது. இந்த போட்டியில் ஷூத்தல் தேவி 25 முறை 10 புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளார். இதன் காரணமாக ரேங்கிங் போட்டியில் 2வது இடத்தில் நிறைவு செய்தார். அதேபோல் மற்றொரு இந்திய வீராங்கனையான சரிதா 682 புள்ளிகள் பெற்று 9வது இடத்தில் நிறைவு செய்தார்.
தொடர்ந்து வில்வித்தைக்கான நாக் அவுட் போட்டிகள் நாளை தொடங்கவுள்ளது. இதில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் இந்திய வீராங்கனை ஷூத்தல் தேவி சிலி வீராங்கனை மரியானாவை எதிர்கொள்ளவுள்ளார். ஷூத்தல் தேவியின் ஸ்பெஷலிட்டி என்னவென்றால், சர்வதேச அளவில் கைகளே இல்லாமல் வில்வித்தையில் ஈடுபட்டுள்ள ஒரே வீராங்கனை அவர் தான்.

கால்களையும், தோளையும் பயன்படுத்தி குறி வைத்து எய்வது பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. கனவுகளுக்கு விடாமுயற்சி மட்டுமே தேவை என்பதை ஷூத்தல் தேவி செயல்கள் மூலமாக நிரூபித்துள்ளார். ஒவ்வொரு முறையும் அம்பை எய்வதற்கு ஷூட்டல் தேவி செய்யும் செயல்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலமாக பாராலிம்பிக்ஸ் தொடருக்கு தகுதி பெற்றார். ஏற்கனவே ஆசிய பாராலிம்பிக்ஸ் தொடரில் தங்கம் வென்றுள்ள அவர், 2023 கேலோ பாரா கேம்ஸில் தங்கம் வென்ற சாதனை படைத்தார். அதேபோல் மத்திய அரசு அவருக்கு அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்துள்ளது.