பாரிஸ் : பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் பால் போக்பாவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை அடுத்து அவர் பிரான்ஸ் அணிக்காக நேஷன்ஸ் லீக் போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மான்செஸ்டர் யுனைட்டெட் அணியிலும் பால் போக்பா முக்கிய வீரராக வலம் வருகிறார். அந்த அணியும் அவருக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்துள்ளது.
பிரான்ஸ் அணி நேஷன்ஸ் லீக் போட்டியில் ஸ்வீடன் மற்றும் குரோஷியா அணிகளுக்கு எதிராக ஆட உள்ளது. தற்போது அந்தப் போட்டிகளில் பால் போக்பா ஆட முடியாது.
இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ள பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ், பால் போக்பாவிற்கு பதிலாக 17 வயது மிட்-பீல்டரான எடுஆர்டோ கமாவின்காவை தேர்வு செய்துள்ளதாக கூறினார்.
இதுவரை பால் போக்பா பிரான்ஸ் அணிக்காக 69 போட்டிகளில் ஆடி உள்ளார். அதில் 10 கோல்களும் அடித்துள்ளார்.
விசுவாசம் தான் எல்லாமே... ஆர்சிபிய விட்டு எப்பவும் விலகமாட்டேன்... விராட் கோலி நெகிழ்ச்சி
மான்செஸ்டர் யுனைட்டெட் அணி பால் போக்பா விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஐரோப்பாவில் கால்பந்து போட்டிகள் ரசிகர்கள் இல்லாத மைதானங்களில் பாதுகாப்பு வளையத்துக்குள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பல கால்பந்து வீரர்கள் தொடர்களின் இடையே கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகி தனிமைப்படுத்தப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. துவக்கத்தில் பீதியைக் கிளப்பிய இந்த விஷயம் தற்போது கால்பந்து தொடரின் ஒரு அங்கமாக மாறி விட்டது. பால் போக்பாவிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பும் அது போன்ற ஒன்றாகவே அமைந்துள்ளது.