மாக்ஸ்வில்லி, நியூ செளத்வேல்ஸ், ஆஸ்திரேலியா: மறைந்த கிரிக்கெட் வீரர் பில் ஹியூக்ஸுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் உருக்கமான இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க மிகுந்த சிரமத்துடன் தனது இரங்கல் செய்தியை வாசித்த கிளார்க்கின் நிலை மிகவும் சோகமாக இருந்தது.
ஹியூக்ஸ் மரணமடைந்தது முதலே கிளார்க் சோகமாக காணப்பட்டார். தனது தம்பி போலவே ஹியூக்ஸுடன் நெருக்கமாக பழகி வந்தவர் கிளார்க். இதனால் ஹியூக்ஸின் மரணம், கிளார்க்கை உலுக்கி விட்டது.
இந்த நிலையில் ஹியூக்ஸ் இறுதிச் சடங்கின்போது கிளார்க குரல் தழுதழுக்க இரங்கல் குறிப்பை வாசித்தார். அதிலிருந்து...
நீ எங்கே போனாய் என்று எனக்குத் தெரியவில்லை. நான் உன்னை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். நிச்சயம் ஏதாவது ஒரு இடத்திலிருந்து நீயும் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பாய்.
மீண்டும் அவன் என்னுடன் பேசுவானா என்று இப்போதும் கூட நான் ஆவலாக உள்ளேன். அவனது முகத்தை மீண்டும் காண ஆசைப்படுகிறேன். மைதானத்தில் அவனை மீண்டும் பார்க்க விரும்புகிறேன்.
அவனது ஆன்மா எங்கும் போகவில்லை. என்னுடனேயே இருக்கிறது. அது என்னை விட்டுப் போகாது என்றே நான் நம்புகிறேன்.
சிட்னி மைதானத்தின் புல்வெளிப் பரப்பில் கடந்த வியாழக்கிழமை இரவு நான் நடந்தேன். அந்த புல்வெளியில் நானும் ஹியூக்ஸும் செலவிட்ட நேரங்கள் என்னை அலைக்கழித்தன. அவனது கனவுகள் அந்த புல்வெளியோடு போய் விட்டன.
அந்த மைதானத்தில்தான் அவன் ரசிகர்களைக் கவர்ந்தான். அந்த மைதானத்தின் எல்லைகதளைத் தாண்டித்தான் அவன் பவுண்டரிகளை விளாசினான்.
அந்த மைதானத்தில்தான் அவன் கடைசியாகவும் வீழ்ந்தான்.
அருமையான இந்த விளையாட்டுக்காக கடைசி வரை துடித்த இதயம் அவனுடையது. அவனது வாழ்க்கையில் எல்லாமே கிரிக்கெட்தான்.
அவனது ஆத்மா கிரிக்கெட்டை அந்த அளவுக்கு நேசித்தது. அவன் ஏற்படுத்தி வைத்துள்ள அந்த அடையாளத்தை சிட்னி மைதானம் என்றுமே மறக்காது. நானும் மறக்க மாட்டேன்.
நாம் அவனை என்றுமே நினைவு கூர்வோம்.
தம்பி, அமைதியாக உறங்கியிரு. நானும் ஒரு நாள் உன்னைத் தேடி வருவேன் என்று பேசினார் கிளார்க். பேச்சின்போதும், பேச்சின் இறுதியிலும் கிளார்க்கால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.