ரியோவில் வரலாறு படைக்கக் காத்திருக்கும் 10 பேர்...!
ரியோ டி ஜெனீரோ: பிரேசிலின் ரியோடி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் 10 பேர் கொண்ட அகதிகள் அணி, ஒலிம்பிக் சம்மேளனத்தின் கொடியின் கீழ் பங்கேற்கவுள்ளது.
இந்த அணிக்கு அகதிகள் ஒலிம்பிக் அணி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பத்து பேரும் ஒரே அணியாக ஒலிம்பிக் தொடக்க நாளின்போது சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் கொடியை ஏந்தி அணி வகுத்து வரவுள்ளனர். நான்கு நாடுகளைச் சேர்ந்த இந்த வீரர்கள், வீராங்கனை குறித்த விவரத்தை கடந்த ஜூன் மாதம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறஇவித்தது. இவர்களது சாதனைக் கனவை நனவாக்க இவர்களுக்கு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் ஒலிம்பிக் கமிட்டி கொடுத்துள்ளது.
இதுகுறித்து ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரான தாமஸ் பேக் கூறுகையில், இவர்கள் அகதிகள். இவர்களுக்கென்று நாடு இல்லை, அணி இல்லை, கொடி இல்லை, தேசிய கீதம் இல்லை. ஒலிம்பிக் கிராமத்தில் இவர்கள் பத்து பேருக்கும் இடம் தரப்பட்டுள்ளது. உலகின் இதர வீரர்கள், வீராங்கனைகளுடன் இவர்களும் சமமாக கலந்துள்ளனர். இவர்கள் ஒலிம்பிக் கொடியை ஏந்தி அணிவகுத்து வருவர். இவர்களுக்காக ஒலிம்பிக் கீதம் இசைக்கப்படும். இப்படி ஒரு அணி பங்கேற்பது இதுவே முதல் முறையாகும் என்பதால் இவர்கள் வரலாறு படைக்கவுள்ளனர் என்றார் பேக்.

யுஸ்ரா மார்டினி
சிரியாவைச் சேர்ந்த யுஸ்ரா மார்டினி நீச்சல் வீராங்கனை ஆவார். இவர் ஜெர்மணியில் தற்போது அகதியாக புகலிடம் பெற்றுள்ளார். 18 வயதாகும் யுஸ்ரா, கடந்த 2015ம் ஆண்டு சிரியாவை விட்டு இடம் பெயர்ந்து வந்தவர் ஆவார்.

ரமி அனிஸ்
ரமி அனிஸ் சிரியாவைச் சேர்ந்தவர். நீச்சல் வீரர். பெல்ஜியத்தில் வசித்து வருகிறார். 25 வயதாகும் இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது 20வது வயதில் குடும்பத்துடன் சிரியாவை விட்டு இடம் பெயர்ந்தவர்.

யோனஸ் கின்டே
எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர் யோனஸ் கன்டே. தடகள வீரர். அதாவது மாரத்தான் போட்டியில் பங்கேற்கிறார். 36 வயதான இவர் லக்சம்பர்க்கில் வசித்து வருகிறார். நான் உயிருடன் இருக்கிறேன். அதுவே எனக்கு மகிழ்ச்சியானது. இப்போது ஒலிம்பிக்கில் பங்கேற்கிறேன். அது மேலும் மகிழ்ச்சி தருகிறது என்று கூறியுள்ளார் யோனஸ்.

யீச் புர் பியல்
தெற்கு சூடானைச் சேர்ந்த 21 வயதான யீச் புர் பியல், தடகள வீரர். 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்து கொள்கிறார். கென்யாவில் புகலிடம் பெற்றவர் இவர்.

ஜேம்ஸ் நியாங் சியன்ஜியக்
தெற்கு சூடானைச் சேர்ந்தவர் 400 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கிறார். கென்யாவிலம் தஞ்சமடைந்து வசித்து வருகிறார்.

ஏஞ்செலினா நடாய் லோஹலித்
இவரும் தெற்கு சூடானைச் சேர்ந்தவர். 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்கவுள்ளார். தெற்கு சூடானை விட்டு வெளியேறி கென்யாவில் வசித்து வருகிறார்.

போபோல் மிசங்கா
24 வயதான போபோல், காங்கோ நாட்டைச் சேர்ந்தவர். ஜூடோவில் 90 கிலோ எடைப் பிரிவில் இவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்கிறார்.

யோலன்டே புகாசா மபிகா
இவரும் காங்கோதான். மகளிர் 70 கிலோ ஜூடோ பிரிவில் கலந்து கொள்கிறார். தற்போது இவர் வசித்து வருவது பிரேசில் நாட்டில்.

லோக் நதிகே லோகோன்யென்
தெற்கு சூடானைச் சேர்ந்தவர் ரோஸ். மகளிர் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்து கொள்கிறார். கென்யாவில் அகதிகள் முகாமில் வசித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications