டெல்லி: புரோ கபடி லீக் சீசன் 5 சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் பிளே ஆப் சுற்றுகள் 23ல் துவங்குகின்றன.
முதல் போட்டியில் புனேரி பல்தான் அணியும், யுபி யோத்தா அணியும் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பட்னா பைரேட்ஸ் அணியும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதுகின்றன.
புரோ கபடி லீக் சீசன் 5 போட்டிகளில் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வந்தன. நேற்று இரவு நடந்த கடைசி ஆட்டங்களில் தெலுகு டைட்டன்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் 37-37 என டை செய்தன. மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ் அணி 23-22 என, புனேரி பல்தான் அணியை வென்றது.
அதையடுத்து, பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் 23ல் துவங்குகின்றன. முதல் எலிமினேட்டர் ஆட்டத்தில் புனேரி பல்தான் அணியும், யுபி யோத்தா அணியும் மோதுகின்றன. இரண்டாவது எலிமினேட்டர் ஆட்டத்தில் பட்னா பைரேட்ஸ் அணியும், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதுகின்றன.
24ம் தேதி நடக்கும் முதல் குவாலிபயர் ஆட்டத்தில் ஏ பிரிவில் முதலிடம் பெற்ற குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ் அணியும், பி பிரிவில் முதலிடம் பெற்ற பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன. 24ம் தேதி நடக்கும் மூன்றாவது எலிமினேட்டர் ஆட்டத்தில் முதல் மற்றும் இரண்டாவது எலிமினேட்டர் ஆட்டங்களில் வென்றவர்கள் விளையாடுவார்கள்.
26ம் தேதி நடக்கும் இரண்டாவது குவாலிபயர் ஆட்டத்தில், முதல் குவாலிபயர் ஆட்டத்தில் தோன்ற அணியும், மூன்றாவது எலிமினேட்டரில் வென்ற அணியும் மோதும். 28ம் தேதி நடக்கும் பைனலில், முதல் மற்றும் இரண்டாவது குவாலிபயர் போட்டிகளில் வென்ற அணிகள் மோதும்.