டெல்லி: டெல்லி பெரோஸ்ஷா கோட்லா கிரிக்கெட் மைதான ஆடுகளம் மிகவும் அபாயகரமானதாக மாறியதால் இன்று தொடங்கிய, இந்திய, இலங்கை இடையிலான 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கைவிடப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்தில் பெரும் அமளியில் இறங்கி இருக்கைளை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
இந்திய கிரிக்கெட் உலகுக்கு இன்று பெரும் அவமான தினம். புகழ் பெற்ற டெல்லி பெரோஷா கோட்லா மைதானம் விளையாட லாயக்கில்லாத மைதானமாக, அபாயகரமானதாக மாறி வீரர்களைக் காயப்படுத்தி போட்டியையே கைவிடும்படி மாற்றி விட்டது.
இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது. இதையடுத்து இந்தியா பவுலிங்கைத் தொடங்கியது. ஆனால் முதல் பந்திலிருந்தே மிகவும் அபாயகரமான முறையில் பந்துகள் போகத் தொடங்கின. பிட்ச்சில் பட்ட பந்துகள் எல்லாம் தாறுமாறாக திரும்பியதால் வீரர்கள் பேட்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
ஒரு பந்து திலகரத்னே தில்ஷானின் தோள்பட்டையைப் பதம் பார்த்து விட்டது. இதனால் அவர் கடும் வலியில் துடித்தார். அவருக்கு உடனடியாக மருந்து தடவப்பட்டது.
24வது ஓவர் வரை போட்டி தட்டுத் தடுமாறி நடந்தது. அப்போது இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் இலங்கை வீரர் திலன் கண்டம்பி, இந்திய கேப்டன் டோணியிடம் ஆடுகளம் குறித்து விவாதித்தார். பின்னர் நடுவர்களிடம் ஆட முடியாத நிலை இருப்பதாக புகார் செய்தார்.
இதை நடுவர்கள் மரைஸ் எராஸ்முஸ் மற்றும் ஷவீர் தாராபூர் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து வீரர்களை பெவிலியன் திரும்புமாறு கேப்டன் சங்கக்காரா உத்தரவிட்டார்.
தொடர்ந்து ஆட முடியாத அளவுக்கு பிட்ச் மோசமானதாக இருந்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ரசிகர்கள் அமளி...
போட்டி கைவிடப்பட்டதால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் கோபத்தில் வன்முறையில் இறங்கினர்.
இந்தியா இந்தப் போட்டியில் வெல்லும், இலங்கையை 4-1 என்ற கணக்கில் தோற்கடிக்கும் என்ற ஆர்வத்தில் அவர்கள் மைதானத்தில் கூடியிருந்தனர். நிரம்பி வழிந்த மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் பிட்ச் சரியில்லாததால் போட்டி கைவிடப்பட்டதை அறிந்து கடும் கோபமடைந்தனர்.
இருக்கைகளை அடித்து நொறுக்கி வன்முறையில் குதித்தனர். அவர்களை போலீஸார் லேசான தடியடி நடத்திக் கலைத்தனர்.
மைதானம் குறித்து கேள்விக்குறி...
புகழ் பெற்ற மைதானமான பெரோஷா கோட்லா மைதானத்தின் பிட்ச் அபாயகரமானதாக மாறியுள்ளதன் மூலம், அதன் சர்வதேசத் தரம் குறித்து பெரும் கேள்விகள் எழுந்துள்ளன.
பிட்ச் கமிட்டி கூண்டோடு கலைப்பு
பெரோஸ்ஷா கோட்லா பிட்ச் படு மோசமான அவமானத்தை கிரிக்கெட் வாரியத்திற்குத் தேடிக் கொடுத்ததைத் தொடர்ந்து, கிரிக்கெட் வாரியம் தனது பிட்ச் மற்றும் மைதான கமிட்டியை கூண்டோடு கலைத்து விட்டது.
இதுகுறித்து கிரிக்கெட் வாரிய செயலாளர் சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கையில், கிரிக்கெட் வாரியத்தின் பிட்ச் மற்றும் மைதானக் கமிட்டி உடனடியாக கலைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
தல்ஜீத் சிங் தலைமையில் ஐந்து பேர் கொண்ட பிட்ச் கமிட்டி செயல்பட்டு வந்தது. இதில் தல்ஜீத் சிங் தவிர தீரஜ் பர்சனா, விஸ்வநாதன், ராஜீவ் கோகலே, ராகுல் தாஸ் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.