தகராறு
இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான மற்றொரு வீரர் சாகர் தன்கத் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த 4ந்தேதி டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சாகர் தன்கத் கடுமையாக தாக்கப்பட்டார்.
கொலை வழக்கு
பலத்த காயமடைந்த சாகர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சுஷில் குமாரை தேடி வந்தனர். இதனால் கடந்த மே.23ம் தேதி சுஷில் குமார் மற்றும் உதவியாளர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர்.
வீடியோ
இந்நிலையில் சுஷில் குமார் தனது சக வீரர் சாகர் தன்கத்தை தாக்கும் வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் மரக்கட்டைகள் மூலம் சாலையில் விழுந்து கிடந்த சாகர் தன்கத்தை மிக மோசமாக தாக்குகின்றனர். சுஷில் குமார் ஜாமீனுக்காக முயற்சித்து வரும் நிலையில் இந்த வீடியோ தற்போது சாகர் கொலை வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குமூலம்
முன்னதாக இந்த வழக்கு குறித்து தகவல் வெளியிட்ட காவல்துறையினர், சம்பவ தினத்தன்று சாகர் ராணா தாக்கப்படுவதை சுஷில் குமார் தனது சக நண்பர் பிரின்ஸ் என்பவரிடம் வீடியோ எடுக்க சொன்னதாகவும், அதை வைரல் ஆக்கினால், இனி யாரும் சுஷில் குமாரை எதிர்த்து நிற்கமாட்டார்கள் என நினைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.