சென்னை: பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக இளைஞர் மாரியப்பனுக்கு நாட்டு மக்கள் எழுதி அனுப்பும் வாழ்த்துகளை 'இ-போஸ்ட்' மூலமாக நேரடியாகக் கொண்டுசேர்க்கும் வசதியை இந்திய அஞ்சல் துறை செய்துள்ளது.
பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று, சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
நாட்டுக்கு முதல் தங்கம் கிடைக்கக் காரணமாக இருந்த மாரியப்பனுக்கு நாடு முழுவதும் ஏராளமானோர் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வளைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏ4 அளவுள்ள தாளில் மக்கள் எழுதிக் கொடுக்கும் வாழ்த்துச் செய்தியை ஸ்கேன் செய்து, மாரியப்பனின் இல்லத்துக்கு கொண்டு சேர்க்கும் வகையில் 'இ-போஸ்ட்' சேவையை அஞ்சல்துறை மேற்கொண்டுள்ளது. நாட்டின் எந்த இடத்தில் உள்ள அஞ்சல் நிலையத்திலும் ரூ.10 கட்டணம் செலுத்தி, மாரியப்பனுக்கு வாழ்த்துச் செய்தியை எழுதி அனுப்பினால், அது சில நிமிடங்களில் மாரியப்பனின் முகவரியில் சேர்க்கப்படும்.
இதற்காக, சேலம் மேற்கு கோட்ட தலைமை அஞ்சல் அலுவலகம், மாரியப்பனின் முகவரியைப் பெற்று, சென்னை தலைமை அலுவலகம் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.