12 வயது 10 மாதம்.. செஸ் உலகை திரும்பிப் பார்க்க வைத்த பிரக்ஞானந்தா!
Recommended Video

சென்னை: சென்னையை சேர்ந்த சிறுவன் பிரக்ஞானந்தா, உலகின் இரண்டாவது இளம் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்று தமிழகத்துக்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். தற்போது, 12 வயது, 10 மாதங்கள் ஆகும் பிரக்ஞானந்தா இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
இத்தாலியின் ஒர்டிசேய் (ORTISEI) நகரில் நடந்து வரும் கிரேடைன் ஓபன் தொடரில் விளையாடி வரும் பிரக்ஞானந்தா, எட்டாவது சுற்றில் இத்தாலியின் கிராண்ட்மாஸ்டர் லூக்கா மொரோனி ஜூனியரை வென்று கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார்.
இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து பிரக்ஞானந்தா தாக்குதல் பாணி ஆட்டத்தை கடைபிடித்து கொடுத்த அழுத்தத்தால், ஒரு கட்டத்தில் மொரோனி ஆட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

கடினமான கிராண்ட்மாஸ்டர் பட்டம்
செஸ்ஸில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. பிடே (FIDE) எனப்படும் உலக செஸ் அமைப்பால் வழங்கப்படும் இந்த உயரிய கவுரவத்தை பெற பல தகுதிகளை உள்ளடக்கிய வெற்றிகளை (NORM) மூன்று முறை பெற வேண்டும். ஏற்கனவே, இரண்டு கிராண்ட்மாஸ்டர் தகுதிக்குரிய வெற்றிகளை பெற்றிருந்த இவர், தற்போது மூன்றாவது வெற்றியையும் பெற்று உலகின் இரண்டவாது இளம் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார்.

2வது இடத்தில் பிரக்ஞானந்தா
கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை இளம் வயதில் வென்றவர்கள் பட்டியலில், உக்ரைனின் செர்ஜி கார்ஜகின் முதலிடத்தில் இருக்கிறார். இவர் தன் 12 வருடம் 10 மாதங்கள் என்ற வயதில், 2002ஆம் ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்தினார். பிரக்ஞானந்தா மூன்று மாத வித்தியாசத்தில் முதலிடத்தை நழுவ விட்டுள்ளார். இந்த இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் மற்றொரு இந்தியரான, பரிமார்ஜன் நெகி ஆவார். இவர் 2006ஆம் ஆண்டு இந்த பட்டத்தை தனதாக்கினார்.
பெரியவர் ஆனந்த்தின் வாழ்த்து
இவரது வெற்றியை அடுத்து பலரும் இவருக்கு வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். செஸ் உலகின் முன்னணி வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான விஸ்வநாதன் ஆனந்த், இவரது சாதனையை பாராட்டியுள்ளதோடு விரைவில், சென்னையில் சந்திக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த இலக்கு உலக சாம்பியன்
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், பிரக்ஞானந்தா தான் எட்டாவது சுற்றுக்கு தயாராகும் போது தான், இந்த ஆட்டத்தில் வென்றால் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்லலாம் என்ற தகவல் தனக்கு தெரியும் எனக் கூறியுள்ளார். இதற்கடுத்து, தான் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை நோக்கி அடுத்து வரும் ஆண்டுகளில் முன்னேற உள்ளதாக தெரிவித்துள்ளார். உலகமே வாழ்த்திக் கொண்டிருக்கும் இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை நாமும் வாழ்த்துவோம்.


Click it and Unblock the Notifications