பிரக்ஞானந்தா சாதனை.. நார்வே செஸ் தொடரில் ஜாம்பவான் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார்!
ஓஸ்லோ: நார்வே செஸ் 2026 தொடரில், உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மீண்டும் ஒருமுறை வீழ்த்தி அதிர வைத்துள்ளார். ஏற்கனவே 2024-ம் ஆண்டு இதே தொடரில் கார்ல்சனை வீழ்த்தியிருந்த பிரக்ஞானந்தா, தற்போது 2-வது முறையாக அவரை வீழ்த்தி சர்வதேச செஸ் உலகில் தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளார். இதன் மூலம் கார்ல்சனுக்கு எதிரான தனது பலத்தை அவர் மீண்டும் உலகிற்குப் பறைசாற்றியுள்ளார்.
இந்தப் போட்டியின் ஆரம்பம் முதலே நிதானமாகவும் துல்லியமாகவும் விளையாடிய பிரக்ஞானந்தா, அனுபவம் வாய்ந்த கார்ல்சனுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். ஆட்டத்தின் நடுப்பகுதியில் கார்ல்சன் சில வாய்ப்புகளை உருவாக்க முயன்றாலும், நேர நெருக்கடி காரணமாக அவர் செய்த ஒரு சிறிய தவறைப் பயன்படுத்திக் கொண்ட பிரக்ஞானந்தா ஆட்டத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.

இறுதியில் நெருக்கடியைத் தாங்க முடியாமல் கார்ல்சன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு ஆட்டத்திலிருந்து விலகினார். கார்ல்சனுக்கு இது இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே ஏற்பட்ட ஒரு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மற்றொரு போட்டியில் தற்போதைய உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ் மற்றும் தொடரில் முன்னிலையில் உள்ள அலிரேசா பிரௌஸ்ஜா ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. பின்னர் வெற்றி வீரரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட 'அர்மகெடன்' முறையில் பிரௌஸ்ஜா வெற்றி பெற்று கூடுதல் புள்ளிகளைப் பெற்றார். இதேபோல் வின்சென்ட் கெய்மர் மற்றும் வெஸ்லி சோ இடையேயான ஆட்டமும் டிராவில் முடிந்தது. இதில் வெஸ்லி சோ அர்மகெடன் சுற்றில் வெற்றி பெற்றார். 3 சுற்றுகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் பிரௌஸ்ஜா முதலிடத்தில் நீடிக்கிறார்.
பெண்கள் பிரிவில் இந்தியாவின் கோனேரு ஹம்பி மற்றும் அன்னா முசிச்சுக் இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. பின்னர் நடந்த அர்மகெடன் சுற்றில் முசிச்சுக் வெற்றி பெற்று கூடுதல் புள்ளிகளைக் கைப்பற்றினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், தொடரில் முன்னிலையில் உள்ள பிபிசாரா அசாபயேவாவை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தாலும், அர்மகெடன் சுற்றில் திவ்யா அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றார்.


Click it and Unblock the Notifications
