பெகு: பிரக்ஞானந்தாவுக்கு எதிரான உலகக்கோப்பை இரண்டாவது சுற்றை டிரா செய்ததற்கு உடல்நிலையே காரணம் என்று உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.
உலகின் நம்பர் 1 செஸ் வீரர் நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன். சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரின் போதே மேக்னஸ் கார்ல்சனின் அணுகுமுறையும் அவரின் செயல்பாடுகளும் தமிழ்நாடு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தன. திறமையான வீரர்களுக்கு மதிப்பளிக்கும் அவரின் பண்பும், களத்தில் டிராவுக்காக ஆடாமல், வெற்றிக்காக ஆடும் ஆக்ரோஷமும் அவருக்கு பல ரசிகர்கள் பெற்று கொடுத்தது.

உலகக்கோப்பைத் தொடரின் காலிறுதி மற்றும் அரையிறுதியில் கூட அவர் வெற்றிக்காக விளையாடினார். இன்னும் சொல்லப் போனால் ஆட்டம் எக்காரணத்தைக் கொண்டு டை பிரேக்கருக்கு செல்லக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். கிளாசிக்கல் ஆட்டத்திலேயே வெற்றிபெற்று சிறந்த ஓய்வை எடுத்தார். ஆனால் பிரக்ஞானந்தாவுடனான இறுதிப்போட்டி ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்சனின் அணுகுமுறை பலராகும் கணிக்க முடியாதபடி உள்ளது.
இறுதிப்போட்டியின் முதல் சுற்றில் தொடக்கத்திலேயே செய்த தவறுகளால், ஆட்டத்தை டிரா நோக்கி கொண்டு சென்றார். ஆனால் இரண்டாவது சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடியும், மேக்னஸ் கார்ல்சன் வேண்டுமென்றே டிராவுக்காக விளையாடியது பலருக்கும் காரணம் புரியாமல் உள்ளது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே விஸ்வநாதன் ஆனந்த், மேக்னஸ் கார்ல்சன் டிராவுக்காக ஆடுகிறார் என்று சொல்லிவிட்டார். சுமார் ஒரு மணி நேரத்திலேயே ஆட்டமும் டிராவில் முடிந்து, டை பிரேக்கருக்கு சென்றுள்ளது.
இதுகுறித்து மேக்னஸ் கார்ல்சன் பேசுகையில், செஸ் உலகக்கோப்பைத் தொடரை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் எனக்கு சிறந்த சிகிச்சையை அளித்தார்கள். நேற்றை ஒப்பிடும் போது, இன்று கொஞ்சம் உடல்நிலை தேறியுள்ளது. ஆனால் முழுமையாக போராடுவதற்கான எனர்ஜி இல்லை என்றே உணர்கிறேன்.
அதனால் இன்னும் ஒருநாள் ஓய்வெடுக்க விரும்பினேன். கடைசி நாளில் சிறந்த உடல்நிலையோடு இருப்பேன் என்று நம்புகிறேன். பிரக்ஞானந்தா ஏற்கனவே சில டை பிரேக்கர் போட்டிகளை சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடி இருக்கிறார். எனக்கும் பிரக்ஞானந்தா சிறந்த செஸ் வீரர் என்பது நன்றாக தெரியும். எனக்கு நல்ல உடல்நிலையும், நாளும் சாதகமாக அமைந்தால், நிச்சயம் நான் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்துள்ளார். அரையிறுதிப் போட்டிக்கு பின் மேக்னஸ் கார்ல்சனுக்கு ஃபுட் பாய்சனிங் பிரச்சனை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.