பெக்கு: செஸ் உலகக்கோப்பை தொடரில் உலகின் நம்பர் 3 வீரரான ஹிகாரு நகமுராவையும், நம்பர் 2 வீரரான ஃபேபியானோ கருவானாவையும் வீழ்த்தி பிரக்ஞானந்தா சாதனை படைத்துள்ளார்.
அசர்பைஜானில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் கொடி தமிழக வீரர் பிரக்ஞானந்தாவால் உயர் பறந்துள்ளது. இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்திற்கு பின் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு தமிழரான பிரக்ஞானந்தா செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் செஸ் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மிகவும் இளவயது வீரர் பிரக்ஞானந்தா என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இதன் முன் 2005ஆம் ஆண்டு 22 வயதில் பொனோமரியோவ் இறுதிப்போட்டியில் ஆடியதே சாதனையாக இருந்தது. ஆனால் பிரக்ஞானந்தா 18 வயதிலேயே செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.
செஸ் உலகக்கோப்பைத் தொடருக்கு 4 இந்தியர்கள் தகுதிபெற்ற நிலையில், அரையிறுதிக்கு பிரக்ஞானந்தா மட்டுமே தகுதிபெற்றார். அதிலும் தெலங்கானாவைச் சேர்ந்த அர்ஜூன் எரிகைசியுடன் நடைபெற்ற டை பிரேக்கர் ஆட்டம் சடன் டெத் வரை சென்று, செஸ் உலகக்கோப்பைத் தொடருக்கே பெரும் விளம்பரமாக மாறியது.
கிரிக்கெட் வார்த்தைகள் மூலம் சொல்ல வேண்டுமென்றால், சூப்பர் ஓவருக்கு மேல் சூப்பர் ஓவர் நடந்து, வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதற்காக கடைசி சூப்பர் ஓவர் நடத்துவதை போன்றது தான் சடன் டெத் விதிமுறை. காலிறுதி ஆட்டம் தான் இப்படி என்று பார்த்தால், உலகின் நம்பார் 2 வீரரான ஃபேபியானோ கருவானாவுக்கு எதிரான ஆட்டத்திலும் மீண்டும் அப்படியே நடந்தது.

4 டை பிரேக்கர் ஆட்டத்தின் முடிவில் தான் பிரக்ஞானந்தா வெற்றிபெற்றார். அதிலும் டை பிரேக்கர் ஆட்டங்கள் அனைத்தும் டி20 கிரிக்கெட்டை போல், ஒரு வீரருக்கு இத்தனை நிமிடங்கள் தான் என்று ஸ்டாப் வாட்சில் டைமர் வைத்து நடத்தப்பட்ட போட்டிகள். அத்தனை அழுத்தங்களையும் கடந்து 18 வயதான பிரக்ஞானந்தா செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
ஏற்கனவே உலகின் நம்பர் 3 வீரரான ஹிகாரு நகமுராவை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. உலகின் நம்பர் 3, நம்பர் 2 இடங்களில் உள்ள வீரர்களை வீழ்த்திய பிரக்ஞானந்தாவிற்கு கடைசி சவாலாக உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் நிற்கிறார். செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மேக்னஸ் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா மோதவுள்ளார்.