பெக்கு: செஸ் உலகக்கோப்பை அரையிறுதியின் முதல் சுற்று போட்டியில் மோதிய தமிழக வீரர் பிரக்ஞானாந்தா - அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானா இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளது.
அசர்பைஜானில் செஸ் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய உலகக்கோப்பை செஸ் தொடர், ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை செஸ் தொடரில் சர்வதேச அளவில் 206 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் செஸ் ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் கவனம் முழுவதும் அசர்பைஜானில் குவிந்துள்ளது.

இந்த உலகக்கோப்பைத் தொடரின் காலிறுதி சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா சக இந்திய வீரரான தெலங்கானாவைச் சேர்ந்த அர்ஜூன் எரிகைசியை எதிர்கொண்டவார். அவருடனான 6 டை பிரேக்கர் ஆட்டமும் முடிவடைந்த போதும் சமனில் இருந்ததால், சடன் டெத் முறை பின்பற்றப்பட்டது. அதில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா அபார வெற்றிபெற்றார்.
இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்திற்கு பின் செஸ் உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய வீரர் என்ற சாதனையையும் பிரஞானந்தா பெற்றார். இந்த நிலையில் அரையிறுதியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 2 வீரரான ஃபேபியானோ கருவானாவை எதிர்கொள்ள வேண்டிய நிலை வந்தது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா கறுப்பு காய்களுடன் ஃபேபியானோ கருவானாவை எதிர்கொண்டார். இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே ஃபேபியானோவின் ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பிரக்ஞானந்தா திணறி வந்துள்ளார். ஆனால் ஆட்டதின் பின் பாதியில் சுதாரித்த பிரக்ஞானந்த ஃபேபியானோவுக்கு ஈடு கொடுத்து ஆடினார்.
இறுதியாக 78 நகர்வுகள் முடிவில் ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளது. இதையடுத்து அரையிறுதி போட்டியின் இரண்டாவது சுற்றுப் போட்டி நாளை நடக்கவுள்ளது. அதில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் விளையாட உள்ளார். இதனிடையே உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சன் - அசர்பைஜானின் நிஜாத் அபசோவை எதிர்கொண்டார். அந்தப் போட்டியில் கார்ல்சன் வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளார். இதனால் நாளைய ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.