என்னைய போட்டோ எடுத்ததே தெரியாது.. நான் வேற யோசனையில் இருந்தேன்.. பிரக்ஞானந்தா தாய் நெகிழ்ச்சி!
சென்னை: பிரக்ஞானந்தாவின் வெற்றிக்கு பின் பெருமிதத்துடன் அவரது தாய் நாகலட்சுமி ஓரத்தில் இருந்து பார்த்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியது. இதுகுறித்து நாகலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.
செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனிடம் 18 வயதேயான தமிழக வீரர் பிரக்ஞானந்தா போராடி தோல்வியடைந்தார். இரு கிளாசிக்கல் ஆட்டமும் டிராவில் முடிந்த நிலையில், டை பிரேக்கரில் தோல்வியை தழுவியதால் அடுத்தடுத்து வரும் உலகக்கோப்பை போட்டியில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வெல்வார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்ரனர்.

அதேபோல் செஸ் உலகக்கோப்பைத் தொடர் மூலமாக பிரக்ஞானந்தா இந்திய செஸ் விளையாட்டின் முகமாக மாறி இருக்கிறார். விஸ்வநாதன் ஆனந்திற்கு பின், மீண்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரே அவரது இடத்தை நிரப்பி இருப்பது தமிழ்நாடு மக்களிடையே கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பிரக்ஞானந்தாவின் வெற்றியில் அவரது தாயின் பங்கும் மிகப்பெரியது. சிறுவயதில் பிரக்ஞானந்தா தீவிரமாக விளையாடத் தொடங்கிய போது, ஒவ்வொரு ஸ்பான்சராக தேடி தேடி சென்று பிடித்த கால்கள் நாகலட்சுமியுடையது தான். ஒவ்வொரு ஊருக்கும் பிரக்ஞானந்தா பயணம் செல்லும் போதும், நாகலட்சுமியும் உடன் பயணிப்பார். இன்று பிரக்ஞானந்தா எட்டியிருக்கும் உயரத்திற்கு, அவரது தாய் தான் மிகமுக்கியக் காரணம்.
இந்த உலகக்கோப்பைத் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் தெலங்கானா வீரர் அர்ஜூன் எரிகைசியை பிரக்ஞானந்தா சடன் டெத் முறையில் வீழ்த்தினார். செஸ் உலகக்கோப்பையின் மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக அந்தப் போட்டி, பிரக்ஞானந்தாவின் தாய்-க்கு அதிக பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவரால் எங்கும் நகரவில்லை.
இந்த ஆட்டத்தில் வென்ற பின் பிரக்ஞானந்தா பேட்டி கொடுத்த போது, ஓரத்தில் நின்று கண்களில் பெருமிதம் பொங்க நாகலட்சுமி பார்த்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த போட்டோகிராஃபர் நாகலட்சுமியின் உணர்வை புகைப்படமாக எடுக்க, அது உலகம் முழுவதும் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது. இதனால் பிரக்ஞானந்தாவின் வெற்றிக்கு பின் இருக்கும் தாயின் நெகிழ்ச்சி போராட்டத்தையும் உலகம் அறிந்துகொண்டது.
இந்த நிலையில் பிரக்ஞானந்தாவின் தோல்வி குறித்து தாய் நாகலட்சுமி பேசுகையில், இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது பெரிய கவலையில்லை. அவர் கேண்டிடேட்ஸ் தொடருக்கு தேர்வானது தான் பெருமகிழ்ச்சி என்று தெரிவித்தார். பின்னர் அவரின் புகைப்படம் பற்றிய பேசுகையில், அந்தப் புகைப்படத்தை எடுத்ததே எனக்கு தெரியாது.
அர்ஜுன் எரிகைசி உடனான போட்டி பரபரப்பின் உச்சத்தில் இருந்தது. அந்த நேரத்தில் பிரக்ஞானந்தா என்ன செய்யப் போகிறார் என்ற யோசனையில் மூழ்கி இருந்தேன். அதுதான் என் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. பின்னர் தான் சோசியல் மீடியாவில் எங்கள் புகைப்படம் ட்ரெண்டானதை அறிந்துகொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications