
ஆதிக்கம் செலுத்தும் இந்தியா
நேற்றைய போட்டியில் இந்தியாவின் பி அணி விளையாடிய போதிலும் பிரக்ஞானந்தா விளையாடவில்லை. அவருக்கு ஓய்வு தரப்பட்டிருந்தது. எனவே பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று பிரக்ஞானந்தா இந்தியாவின் சார்பில் களமிறக்கப்பட்டார். அவர் எஸ்டோனியா வீரர் கிரில் சுக்கவை எதிர்த்து விளையாடினார்.

பிரக்ஞானந்தா ஆட்டம்
கருப்பு நிற காயை தேர்வு செய்து விளையாடிய அவர், தனது 41 வது நகர்த்தலில் எதிரணியை வீழ்த்தி வெற்றி கண்டார். இன்று களமிறங்கிய மற்ற 2 தமிழக வீரர்களான அதிபன் பாஸ்கர், கார்த்திகேயன் முரளி ஆகியோரும் வெற்றியை பெற்று அசத்தினார். இதன் மூலம் இந்திய பி அணிக்கு இன்றைய தினமும் வெற்றிகரமாக அமைந்திருந்தது.

சேலத்து வீராங்கனை
மகளிர் சி அணியின் சார்பாக களமிறங்கிய சேலத்தை சேர்ந்த நந்திதா, தன்னை எதிர்த்து விளையாடிய சிங்கப்பூர் வீராங்கனை இமான்னுவேலை 34வது நகர்த்தலில் வீழ்த்தினார். சி அணியில் இடம்பெற்று ஆடிய ஈஷா கர்வடேவும் வெற்றி பெற்றார்.

மேலும் 2 வெற்றிகள்
இன்றைய தினத்தில் இந்தியாவின் ஓபன் பிரிவில் இருந்து ஏ அணி மால்டோவா அணியை வீழ்த்தியிருந்தது. இதே போன்று மகளிர் சி பிரிவில் இருந்து களமிறங்கிய வீரர்களும் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி அசத்தியது. இதன்மூலம் இந்தியாவுக்கு இன்றைய நாளும் வெற்றிகரமாக அமைந்திருந்தது.


Click it and Unblock the Notifications











