லாஸ் வேகாஸ்: அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் பிரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் செஸ் போட்டியில், இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம், பிரக்ஞானந்தா தனது பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்த பிரீஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் நான்காவது சுற்றில், பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் விளையாடி, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி கார்ல்சனுக்கு கடும் நெருக்கடி அளித்தார்.

இந்த தோல்வி, நடப்பு உலக சாம்பியனான கார்ல்சனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்த அவர், லெவன் அரோனியனுடனான டைபிரேக்கர் போட்டியில் தோல்வியடைந்து, போட்டியின் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறினார். இது செஸ் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொடரில் பங்குபெற்ற மற்றொரு இந்திய வீரரான அர்ஜுன் எரிகைசியும் தனது பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதேநேரம், மற்றொரு இந்திய வீரரான விதித் குஜராத்தி தனது பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்து போட்டியிலிருந்து வெளியேறினார். கார்ல்சனுக்கு எதிரான பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றி, உலக செஸ் அரங்கில் அவரது வளர்ச்சியை மீண்டும் உறுதி செய்துள்ளது.
உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா பலமுறை வீழ்த்தி இருப்பதன் மூலம் உலகை ஆச்சரியப்படுத்தியுள்ளார். 2022 ஆம் ஆண்டு, ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் கார்ல்சனை முதன்முறையாக வீழ்த்தினார். அப்போது அவருக்கு வயது 16. இதன் மூலம், விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் பென்டலா ஹரிகிருஷ்ணாவுக்குப் பிறகு கார்ல்சனை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். அதன்பிறகும் பல தொடர்களில் கார்ல்சனை வீழ்த்தி, அவருக்கு பெரும் சவாலாக விளங்கி வருகிறார்.
பிரக்ஞானந்தாவின் அமைதியான மற்றும் பதற்றமில்லாத அணுகுமுறை, உலகின் தலைசிறந்த வீரர்களுக்குக் கூட கடும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரது தந்திரமான நகர்வுகளும், கூர்மையான வியூகமும் அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகின்றன. அதுவே அவரது வெற்றி ரகசியமாக உள்ளது. உஸ்பெகிஸ்தானில் சமீபத்தில் நடந்த மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடரில் வெற்றி பெற்று, உலகத் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளார்.
பிரக்ஞானந்தாவின் தொடர் வெற்றிகள், இந்திய செஸ்ஸின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை உணர்த்துகிறது. விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு, குகேஷ் உலக சாம்பியனாகி இருக்கிறார். அவரைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து மற்றுமொரு உலக சாம்பியன் உருவாகி வருகிறார் என்பதை இந்த வெற்றி உணர்த்துகிறது.