டெல்லி: ரியோ ஒலிம்பிக்கில் சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்ததையடுத்து, அவரது பெற்றோர்கள், விளையாட்டில் பங்கேற்க விரும்பும் பெண்களை தந்தையர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்றார் சாக்ஷி மாலிக். இதனையடுத்து இவரது தந்தை சுபீர் மாலிக், விளையாட்டில் ஈடுபடும் தங்களது பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் பல பெண்கள் விளையாட்டில் பங்கேற்க ஊக்கம் பெற்றிருப்பதாக சுபீர் தெரிவித்துள்ளார். தங்களது பெண்களை விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்காத பெற்றோர்களுக்கு, சாக்ஷி மாலிக் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்றும் பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஹரியானா அரசு ஆதரவு அளிக்கிறது என்றும் சுபிர் கூறியுள்ளார்.
மேலும், 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் தனது மகள் சாக்ஷி மாலிக் தங்கம் வெல்வார் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
"தொடக்க காலத்தில் பலரும் பெண் பிள்ளையை ஏன் மல்யுத்தப் பயிற்சிக்கு அனுப்புகின்றீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இன்று சாக்ஷி மாலிக்கின் கடின உழைப்பால் பதக்கம் வென்றதையடுத்து அவர்கள் அனைவரும் வாயை மூடிவிட்டனர்" என்று சாக்ஷி மாலிக்கின் தாயர் சுதேஷ் மாலிக், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.