சென்னை : நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, சென்னையில் நடைபெற்ற தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
சில வாரங்கள் முன்பு பிவி சிந்து பாட்மிண்டன் உலக சாம்பியன் பட்டம் வென்றார். அதை பாராட்டும் விதமாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் விழாவில் பங்கேற்கவும் பிவி சிந்து இன்று காலை சென்னை வந்தார்.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்த மாணவர்கள் மற்றும் சர்வதேச அளவிலான சாதனை புரிந்த மாணவர்களுக்கு சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள உதவித் தொகையை வழங்கினார் பிவி சிந்து. மேலும், கல்வியில் சாதனை புரிந்த மாணவர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.
பின்னர் பள்ளி மாணவர்கள் இடையே பேசிய சிந்து விளையாட்டு மீதான ஈடுபாடு, அர்ப்பணிப்பு உணர்வு, எதிர்கால லட்சியம் உள்ளிட்டவை குறித்து உரை ஆற்றினார்.

தன் பேச்சின் போது மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வெற்றியை தனதாக்கிக் கொள்ள பாடுபட வேண்டும் என்று பேசினார்.